வியாழன், செப்டம்பர் 23, 2010

யார் தீண்டத்தகாதவன்? Vasala Sutta

மனிதனின் தீய குணங்களை புத்தர் இந்த வசல சுத்தத்தில் பட்டியல் இட்டுக் காட்டுகிறார். மேலும் பிறப்பால் எந்த ஒருவரும் உயர் அடைவதில்லை என்று ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.

ஒரு நாள் புத்தர் உணவு ஏற்கும் பொருட்டு சாவதி நகருக்குள் சென்றார். அப்பொழுது பாரத்வாஜர் என்ற அந்தணர் பிரம்மயாகத்தை முடித்து ஒரு நல்ல சகுணத்திற்காகக் காத்திருந்த பொழுது புத்தர் தனது இல்லத்தை நோக்கி வந்து கொண்டுருப்பதை கண்ணுற்ற அவர், புத்தரை நோக்கி கடுஞ் சொற்களில் கூறலானார்.

"அங்கேயே நில்லும்"
"தலையை மழித்திருக்கும் துறவியே
அனுதாபத்திற்க்குரிய யோகியே
தீண்டத்தகாதவனே"

புத்தர் வினவுகிறார் :
உமக்கு தெரியுமா அந்தணரே யார் ஒருவன் தீண்டத்தகாதவன் என்று? நாம் கூறுபவைகளை மனதில் நன்கு இருத்திக் கொள்வீராக.

01. எளிதில் வெகுளிக்கு உட்படுபவன், நீங்கா வெறுப்பை மனதில் கொண்டவன், நன்மை இருந்து விலகிச் செல்பவன், முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவன்

02 . மண்ணுயிர்களுக்குத் தீங்கை வீளைவிப்பவன், அவன் ஒரு முறை பிறந்தவன் ஆயினும், இரு முறை பிறந்தவன் ஆயினும் உலக உயிர்களின்பால் கருணை இல்லாதவன்.
அந்தணர்கள் உபநயத்திற்கு முன்பு ஒரு பிறவி ஆகவும், பூணுலை தரித்து தொடரப்படும் வாழ்வை இரண்டாம் பிறவி ஆகவும் கருதிக்கொள்வதால் புத்தர் ஒரு பிறவி பிறந்தாலும் இரு பிறவி எடுத்தாலும் என்று கூறுகிறார்
03. கிராமங்களையும், சிறிய சந்தைப் புறங்களையும் முற்றகையிற்று, அவைகளை எல்லாம் அழித்து ஆக்கிரமிப்புச் செய்பவன்.

04. கிராமத்தில் இருந்தாலும், வனத்தில் வாழ்ந்தாலும் ஒருவன் தனக்கு வழங்கப்படாததும், பிறரிடம் இருந்து கவர்ந்ததுமான பொருளைக் கொண்டு வாழ்கிறவன்

05. கடனைப் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பிச் செலுத்துமாறு ஆணையிடப்படும் பொழுது "உமக்கு நான் கடன்பட்டவன் அல்ல" என்றுகூறி ஓடி மறைகிறவன். 

06. சிறிய அற்ப பொருள்களின் மீது ஆவா கொண்டு, தனிவழியே செல்லும் ஒருவனை கொன்று அவன் கைப்போருளை கவர்கிறவன்

07. தன் பொருட்டோ அல்லது பிறரின் பொருட்டோ அல்லது பெரும் செல்வத்தின் பொருட்டோ சாட்சியம் கூற அழைக்கப்பாட்டிருக்கும் பொழுது பொய் உரை கூறுகிறவன்.

08. வன்முறையாலோ அல்லது ஒப்புதலுடனோ உறவினர்களின்  மற்றும் நண்பர்களின் துணைவிகளுடன் கூட ஒழுக்கம் கொண்டுள்ளவன்.

09 . பெரும் செல்வம் உடையவனாக இருந்தும் தங்களது இளமைக் காலத்தைக் கடந்து முதுமையுற்றிருக்கும் பொற்றோர்களைப் பேண மறுக்கிறவன்.

10. தனது தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மாமன், மாமி இவர்களை அடித்துத் துன்புறுத்திக் கடுஞ்சொல் கூறி அவர்களின்  மனதைப் புண்படுத்துகிறவன்.

11 . நன்மை யாது? என விளக்கம் கேட்கப்படும் பொழுது, நன்மையை மறைத்து தீமையைப் போதிக்கிறவன்.

12 .தீமையை செய்துவிட்டு பிறர் அதை அறியக்கூடாது என்பதற்காக அதை மறைக்கிறவன்.

13. பிறரின் இல்லம் சென்று நல்விருந்து அருந்திக் களித்துவிட்டு அவர்களுக்குத் திரும்ப அதே போன்ற விருந்தோம்பலைச் செய்ய மறுக்கிறவன்

14 .ஓர் அறவோரையோ, ஒரு ஞானியையோ, ஒரு துறவியையோ       பொய்யுரை கூறி ஏமாற்றுகின்றவன்.

15. ஓர் அறவோரையோ, ஒரு ஞானியையோ, ஒரு துறவியையோ கடுஞ்சொல் கூறி அவர்களை வெறுப்படையச் செய்து, உணவு வேலை வரும் பொழுது அவர்களுக்கு உணவு கொடுக்க மறுக்கிறவன்.

16 .இவ்வுலகில் தான் அறியாமையால் பீடிக்கப்பட்டு இல்லாத ஒன்று நிகழும் என இறைவாக்குக் கூறி அதன் பொருட்டு பொருளை எதிர்நோக்குகிறவன்

17 . தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்தி தற்பெருமையால் தவறிழைக்கிறவன்

18. மற்றவரை வெறுப்படையச்செய்து, செல்வத்தின் மீது பற்று கொண்டு சிற்றின்பங்களில் நாட்டம் கொண்டு சுயநலமிக்கவனாக பிறரை வஞ்சிகிறவன் தீயவற்றை செய்வதற்கு அச்சமும் நாணமும் அற்றவனாக இருககிறவன்.

19. புதர்களையோ, அவர்களது சீடர்களையோ,ஏகாந்த வாழ்க்கை வாழும் பரிவிராஜகர்களையோ, இல்லறத்தார்களையோ, கடுஞ்சொற்களால் விமரிசிப்பவன்.

20. அரகந்த நிலையை அடையாது, தாம் அரகந்த நிலையை அடைந்து விட்டதாக கூறிகொள்கிறவன். இவர்களே தீண்டத்தகாதவர்கள்.


பிறப்பால் ஒருவர் தீண்டத்தகாதவர் அல்ல
பிறப்பால் ஒருவர் அந்தணர் அல்ல
அவரவர் செயலால் ஒருவர் தீண்டத்தகாதவராகிறார்
அவரவர் செயலால் ஒருவர் அந்தணராகிறார்


அந்தணரின் காழ்ப்புஉணர்வுக்கு காரணம்  
01. புத்தரும் நிகண்ட நாத புத்திரர் என்ற மகா வீரரும்தான்,  தங்களது சீடர்கள் தலையை மழித்துக்  கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய முறையை ஏற்படுத்தினார்கள்.

02 . இது இந்திய துறவியல் முறைக்கு முற்றிலும் புதியது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட. ஏனெனில் இந்திய யோகிகளும், துறவிகளும், தவ சீலர்களும் நீண்ட ஜடாமுடியைக் கொண்டு மரஉரி ஆடைகள் அல்லது மான், புலி போன்ற விலங்கினங்களின்  தோல்களை ஆடையாக அணிந்து  இருந்தினர்.

03 . புத்தர் முற்றிலும் வேறுபாடான தூய மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த செந்நிற ஆடைகளான "சீவர ஆடையை"  இந்திய ஆன்மிக வரலாற்றில் புதிதாக புகுத்தினார்.

04 . அந்தணர்களுக்கே உரியது என்று கருதப்பட்ட சந்நியாச தீட்சையைப் புத்தர் பெருமான் எல்லோருக்கும் தடை இன்றி பெறுவதற்கு அனுமதி அளித்தார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக