திங்கள், டிசம்பர் 28, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IX ஆற்பாக்கம்

ஆற்பாக்கம்
ஆதிகேசவப் பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்                       : ஆற்பாக்கம்
வட்டம்               : காஞ்சிவரம் வட்டம்
மாவட்டம்         : காஞ்சிவரம் மாவட்டம்

காஞ்சிவரம்  பேருந்து நிலையத்தில் இருந்து  14.4 கி. மீ தொலைவில் உள்ளது ஆற்பாக்கம். காஞ்சிவரம் உத்திரமேரூர் வழி சாலை வழியாக ஆற்பாக்கம் மண்டபத்தில் இருந்து  1 கி.மீ தொலைவில் உள்ளது ஆதிகேசவப் பெருமாள் கோவில். இது ஜின ஆலயம் அருகில் அமைந்துள்ளது. 

புத்தர் சிலைகள் 
01. நன்னிலையில் உள்ள சிலை
02. கேட்பாரற்று முட்புதரிலிருக்கும் சிலை
03. காணாமல் போன சிலை 
01. நன்னிலையில் உள்ள சிலை 

அமைவிடம்
ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளே பின்புறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது 
 சிலையமைப்பு 
வலது கை காக்கும் கை, இடது கை வழங்கும் கை, (இருகரங்களும் உடைக்கப்பட்டுள்ளது) கால்கள் சமநிற்கை, ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று, ஒளிவட்டம் திருவாசி தோரணம், சீவர ஆடை இடப்புற தோள் மற்றும் இரு கால்களின் பாதத்தின்மேலும் இடது கையில் இருந்து சீவர ஆடை கால்பாதம் நோக்கி தொங்கி இருக்கிறது. இரு கால்களின் முட்டிக்கு கீழே மூன்று மடிப்புகளுடன் அலை போன்று சீவர ஆடை இருக்கிறது. சிலை உயரம் 2 ½ அடி உயரம், சிலை அகலம் 1 அடி அகலம், அரசு சோழர் கால சிற்பம். 
01. இக்கோவிலுக்குள் ஆண்டாள் சன்னதி சுற்றுபுறத்தில் கைகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இது முன்பு ஆண்டாள் சன்னதியில் வழிபாடும் சிலையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றுரைக்கிறார் பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் (போதி மாதவர்  - பக் 165) 
02. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நின்ற நிலையில் உள்ள சிலை ஜாவா தேசத்து அமைப்பில் காணப்படுகிறது என்றுரைக்கிறார் G. சேதுராமன்  (பௌத்த கலை வரலாறு . பக் 192 )  
02. கேட்பாரற்று முட்புதரிலிருக்கும் சிலை
அமைவிடம்
புத்தர் தோட்டத்தில் (அ) கோவிலின் பக்கவாட்டில் உள்ள முட்புதரில் உள்ளது 
 சிலையமைப்பு
கை நிலத்தை தொடும் கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, கழுத்து கோடுகள் மூன்று, சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது, சிலை உயரம் 3 ½ அடி உயரம், சிலை அகலம் 2 ½ அடி அகலம், அரசு சோழர் கால சிற்பம். தலை உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது
03. காணாமல் போன சிலை  

சிலையமைப்பு
கை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று, ஒளிவட்டம் இரு தோள்கள் வரை அமைந்துள்ள தோரணம், சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது, சிலை உயரம் 5 அடி உயரம், சிலை அகலம் 3 அடி அகலம், நெற்றி திலகத்துடன் காணப்படுகிறது (Urna) அரசு சோழர் கால சிற்பம். சிலை.
25.11.2003 அன்று இரவு இச்சிலை காணாமல் போனது. காவல் துறையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடு போன புத்தர் சிலையைக் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன இச்சிலையின் படம் பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் அவர்களின் நூலில் இருந்து எடுத்தது
புத்தர் தோட்டம்

01. புத்தர் தோட்டம் பல ஏக்கர் நிலப்பகுதியை கொண்டது. இந்த புத்தபள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் (மேலே உள்ள கோவில்) எழுப்பப்பட்டுள்ளது. இப்போது புத்தர் தோட்டம் உட்பட புத்தர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன.
இந்தப் புத்தர் தோட்டத்தைத் தவிர புத்தமன பேட்டை என்கிற இடத்தில் அகழ்வாராய்வு நடத்தினால் பல புத்தர் சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சி.மீனாட்சி கூறுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu Pg 73)
02. ஆதிகேசவ பெருமாள் கோவில் பௌத்த பள்ளி இருந்த இடத்தில் கட்டப்பட்டு இருக்கிறதாக கருதப்படுகிறது. இங்குள்ள தோட்டம் புத்த பள்ளி தோட்டம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. G. சேதுராமன் - பௌத்த கலை வரலாறு.
குறிப்புகள் 
01. மேலே குறிப்பிட்ட மூன்று புத்தர் சிலைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் உள்ளே இருந்தன. அமர்ந்த நிலையில் இருந்த இரு புத்தர் சிலைககளை சிலர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வெளியில் எறிந்து விட்டதாக ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பலர் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இச்சிலைகள் இரண்டும் கோயில் அருகே கேட்பாரற்று முட்புதரில் கிடந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலைகளைச் சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, சிலைகள் தெளிவாகத் தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சிலையின் பெருமையை உணர்ந்தவர்கள் அவ்வப்போது சிலைகளைப் பார்த்தும், வணங்கியும் வந்தனர். பவுத்த ஆய்வுக்காக வருபவர்கள் பலரும் இச்சிலைகளை ஆய்வு செய்துள்ளனர் என்றுரைக்கின்றார் எழுத்தாளர்  மு.நீலகண்டன் அவர்கள்.   
02. இவ்வூரில் இராசகுளம் அருகில், (ஆற்பாக்கம் காலனி அடுத்து) உள்ள ஒரு கொல்லை மேட்டில்  சிறுவர்களால் முகம் சிதைக்கபட்ட நிலையில் சிலை  உள்ளது என பௌத்த ஆர்வலர் தி இராசகோபாலன்  போதி மாதவர் என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக் 261). இங்கு இரண்டு முறை சென்று இராசகுளம் அருகிலும், அங்குள்ள மக்களிடம்  திரு இராஜ கோபாலன் நூலில் இருந்த புத்தர் சிலை படத்தை காண்பித்து விசாரித்தேன். அங்கிருக்கும் மக்களிடம் பார்த்தது இல்லை என்ற பதிலே கிடைத்தது.     
 03. சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை  இங்கு 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். 

மேலும் விரிவாக படிக்க 
காஞ்சியில் புத்தர் தோட்டம்- மு.நீலகண்டன்
ஆற்பாக்கம் அகழாய்வு 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக