வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

புத்த மார்க்க வினா விடை-3


க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.

01 . புத்தராகிய சற்குரு ஞான நீதிகளைப் போதித்து வந்தார் என்பதில் ஞானம் என்பதின் பொருள் என்ன?
ஞானம் என்பது அறிவு என்னும் பொருளைத் தரும். அஃது சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகைப்படும்.

02. சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகை அறிவுகள் உண்டோ?
உண்டு, அதாவது, சிறு வயதுள்ள மனிதன் என்றும் பேரு வயதுள்ள மனிதன் என்றும் தேகியை (தேகத்தை) குறிப்பது போல அறிவினிடத்திலும் விருத்தி பேதத்தால் இரு வகைகள் உண்டு.

03. சிற்றறிவு என்பது என்ன?
தங்கள் மனதை வீண் விஷயங்களில் செல்லவிடாமலும், தேகத்தைச் சோம்பல் அடையச்செய்யாமலும், உலோகங்களால் செய்யுங் கருவிகளையும், மரங்களால் செய்யுங் கருவிகளையும் கண்டுபிடித்து, உலகில் உள்ள சீவராசிகளுக்கு சுகம் உண்டாக்கி வைப்பது அல்லாமல், தங்களையும் தங்களை அடுத்தோர்களையும் குபேர சம்பத்தாக வாழ்விக்கச் செய்யும் ஓர்வகை உத்திக்கு சிற்றறிவு என்று கூறப்படும்.

04. அவ்வகை சிற்றறிவினால் கண்ட வித்தைகள் எவை?
பஞ்சை நூலகத் திரிப்பதும், நூலை ஆடையாக்குவதும், மண்ணிற் பலன் உண்டாக்குவதும், மண்ணை இரும்பாக மாற்றுவதும், இரும்பை இயந்திரங்களாக்குவதும், இயந்திரங்களால் புகைரதம், புகைகப்பல், மின்சாரதந்தி, மின்சார ரத முதலிய சூத்திரங்களை உண்டு செய்வதேயாம். இவ்வகை சிற்றறிவுடையவனை சூஸ்திரனென்றும், சூத்திரனென்றும் கூறப்படும். இதுவே விருத்தி ஞானமாம்.

05 பேரறிவு என்பது என்ன?
சீவராசிகளாகக் தோன்றும் யாவும் அநித்தியம் (நிலையற்றது) என்று அறிந்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முப்புரங்களையும் அறிந்து எல்லாக் கவலையும் அற்று இருப்பதை பேரறிவு என்றும் சொருப ஞானம் என்றும் உண்மை என்றும் கூறப்படும்.

06 இவ்வகை பேரறிவினால் உலகில் உள்ளோருக்கும் தனக்கும் உண்டாகும் பயன் என்ன?
தனக்கு உண்டாகும் பிறப்பு, பிணி. மூப்பு, மரணம் என்னும் நான்கு வகைத் துக்கங்களை ஜெபித்துக்கொள்வது அல்லாமல் தன்னை அடுத்தவர்களுக்கும் சுகவழியைப் போதிப்பான். இவ்வகை பேரறிவாளனை வடமொழியில் பிராமணன் என்றும் தென்மொழியில் அந்தணன் என்றும் கூறப்படும்.

07 அஞ்ஞனம் என்பது என்ன?
அஞ்ஞனம் என்பது அறிவின் விருத்தி இல்லாமல் என்று கூறப்படும். அதாவது தன்னுடைய அறிவினால் ஒன்றை விசாரித்து தெளியாமல் ஒருவன் சொல்லுவதை நம்பிக்கொண்டு பேசுவது, ஒருவன் எழுதி வைத்திருப்பதை நம்பிநடப்பது ஆகிய செய்கைகளை அஞ்ஞனம் எனபபடும்.

08 உலகத்தில் எழுதிவைத்திருக்கும் வேதங்களும் புராணங்களும் அவற்றின் போதனைகளும் அஞ்ஞனம் ஆகுமோ?
அவைகளை வாசித்த நிலையிலும், கேட்ட நிலையிலும் நிற்பது, கற்கண்டு என்று எழுதியிருப்பதையும் கற்கண்டு என்று போதித்த வார்த்தையும் கேட்டுக்கொண்டு அதை விசாரியாமலும், சிந்தியாமலும், கற்கண்டு கற்கண்டேன்னும் பொருகளை எல்லோரும் காணக்கூடியதாய் இருந்தாலும் அதின் இனிப்பாகிய சுவையை ஒவ்வொருத்தனும் சுவைத்தறிந்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.

09. மெஞ்ஞானம் என்பது என்ன?
வாசித்தவைகளையும், கேட்டவைகளையும் சிந்தித்து தெளிவடைதலும் கற்கண்டு என்பவை எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதின் நிறம் ஏத்தகையது? அதின் சுவை ஏத்தகையது? என்று தேடி வாசரித்து சுவைத்து அறிந்த நிலையே மெஞ்ஞானம் எனப்படும்.

10. புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிருவாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன?
துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிருவாணம் எதிரிடையாயிருக்கின்றது. எக்காலத்தும் நித்திரையில்லாமல் விழித்திருப்பவனை போலும், இரவென்பது இல்லாமல் பகலவனாய் இருப்பது போலும், பிறவியை நீக்கி நித்திய ஜீவனானவர்களுக்கு நிருவாணம் அடைந்தோர் என்றும், தேகத்தில் நோய்க்கண்டு பலவகைத் துன்பங்களால் கபமீறி சுவாசம் அடைக்குங்கால் பொருளின் பேரிலும், பெண்சாதி பிள்ளைகள் பெயரிலும் இருக்கும் பாசம் இழுத்து, பெரு நித்திரை உண்டாக்கி அநித்திய சிவனையடைந்து பிறவியின் ஆளானோர்களை மரணம் அடைந்தார் என்றும் கூறப்படும். ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.

11. நிருவாணம் என்பது என்ன?
பொய்மை ஆகிய தேகத்திக்பேரில் அணைந்துள்ள வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விடுவதை தேக நிருவாணம் என்றும்; பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று மனதில் அணைந்துக் கொண்டிருக்கும் பற்றுக்களை கழற்றி எறிந்துவிட்டு உண்மையாகிய ஒளியுற்றலை நிருவாண நிலை என்றும், அந்தர நிர்வாணம் என்றும், எல்லோரும் தரிசிக்க உண்மை ஜோதி வானோக்கி எழுதலை மகா பரிநிர்வாணம் என்றும் கூறப்படும். (ஆசை என்னும் இளமையிலிருந்து ஆசையற்று முத்தினான், முத்திபெற்றான், கடைத்தேறினான், மோக்கமுற்றான் நிருவாணமடைந்தான் என்று வழங்கி வருகிறார்கள்) இவ்வகையான சுகவழியை ஆதியில் போதித்தவுரம், அதின் அனுபவமாகிய சுகமுக்தியைக் காண்பித்தவரும், சற்குருவான புத்தராகையால் அவர் போதித்த சுயக்கியான வழியினின்று நிருவாணமுற்ற பின் அடியார்களை ஆதிக்க சமமானவர்கள் என்றும், சமஆதியானார்கள் என்றும், சமாதியானார்கள் என்றும் வழங்கி வருகிறார்கள்.

12. தன்னிற்றானே உண்மை அறிந்து சுகமடைய வேண்டுமேயல்லது பிறரால் யீடேற்றம் உண்டாவதில்லை என்னும் சுயக்கியானத்தைப் போதித்த புத்தரவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை வருடமிருந்தார்?

சாக்கிய சக்கரவர்த்தி திருமகனாக பிறந்து பதினாறாவது வயதில் அசோதரை என்னும் மலையசன் புத்திரியை விவாகம் செய்து, இருபதாவது வயதில் இராகுலன் என்னும் ஓர் புத்திரனைப் பெற்று, இருபத்தியோராவது வயதில் அரசாங்கத்தையும் தனது பந்துமித்திரரையும் விட்டு அரச மரத்தடியில் நிலைத்து தன்னையறிந்து காமமென்னும் மன்மதனையுங் காலனென்னும் மரணத்தையுங் செயித்து, முப்பதாவது வயதில் உண்மையின்று உலகேங்கும் சுற்றி சுயக்கியான சங்கங்களை ஏற்படுத்தி ஜீவகாருண்ய வாழ்க்கையையிருத்தி விட்டு, எண்பத்தைந்தாவது வயதில் காசியில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் சோதிமயமாக எல்லோரும் தரிசிக்கும்படி நிருவாண திசையடைந்தார்.

13. பிறவி என்பது என்ன?
அணுவிலும் சிறிய சீவராசிகள் கண்களுக்குத் தோன்றும் உருவமாக எழும்புவதைப் பிறப்புபென்றும், அந்த தோற்ற உருவம் அழிந்துவிடுவதை இறப்பென்றும் கூறப்படும். இதில் கண்களுக்கு தோன்றும் தேகத்திற்கு பொய்மையென்றும், அதை தோற்றிவிக்கும் சத்துக்கு உண்மையென்றும், இருவகைகள் உண்டு. இவற்றுள் தேகத்தை தானென்று அபிமானித்திருக்கும் வரையில் பிறவியென்னும் துக்க சக்கரத்தில் சுழன்று திரிவான். தேகத்தை தானல்லவென்று நீக்கி உண்மையாகிய தன்னையறிந்தவன் பிறவியென்னும் துக்க சக்கரத்தை விடுவித்துக் கொள்ளுவது மல்லாமல் தேகனென்று சொல்லும் வார்த்தை நீங்கி தேவனென்று சொல்லும் மேன்மையடைவான்.

14 சிலர் தன் முயற்சியினால் சுகம்பெரும் வழிகளை நம்பாமல் மணி மாலைகளைக் கொண்டு ஜெபித்திருப்பது என்ன?
ஒரு வசனத்தை பலமுறை சொல்வதே ஜெபமாகும். அவற்றுள் எண் வழுவாமல் காக்க மணிமாலையை சுழற்றுவதன்றி மற்றியாதும் இதில் பயனில்லை.

15. கடவுளை வழிபடுவது என்றால் என்ன?
அவர் உலகில் பிறந்து நமக்கு அருளிய நியாயங்களில் நாம் நின்றோழுகுவதே கடவுளை வழிபடுவதேயாகும்.

16 கடவுளை மாத்திரம் நம்பிக்கொண்டு முக்திபெற முடியாதோ?
கடவுள் என்பதற்கு நன்மெய் என்ற பொருளிருக்க அம்மொழியை மட்டும் விசுவாசித்து வாக்கு, மனம், காயத்தால் தீயச்செய்கையில் நிலைப்பவர்க்கு முக்தியே இல்லை.

17 அறிவே ஆனந்தம் எனபதென்ன?
அறிவால் சர்வமும் உணர்ந்து புண்ணியத்தைக் கைக்கொள்வது மக்களின் முதற் பேறாகும் இதனை அறிவின் மயமென்றும் சொல்லப்படும்.

18 . இவைகளை வகுத்தார் யார்?
ஆதியங் கடவுளாகிய சாக்கைய புத்த சுவாமியே.

19 . இவ்வகை பேரானந்த ஞானங்களைப் போதித்த சற்குரு நிருவாண திசையடைந்து எத்தனை வருடமாகிறது?
இந்தகலியுகம் 5057 மன்மத - சித்திரை மாதம் ( மே 1955 ) பௌர்ணமி திதி வரையில் 2499 வருடமாகிறது. (தற்போது சித்திரை மாதம் மே 2011 பௌர்ணமி திதி வரையில் 2555 வருடமாகிறது)

20 . புத்தர் போதித்துள்ள அட்டாங்க மார்க்கத்தில் மனதையடக்க மந்திரங்கள் ஏதேனும் உண்டோ?
உண்டு. மந்திரம் என்பதற்கு ஆலோசித்தல் என்னும் பொருளை தரும் அதாவது, மனமென்னும் சத்துவிழிப்பில் எங்கிருந்து உதிர்கின்றன, நித்திரையில் எங்கு அடங்கின்றன, சொப்பனத்தில் எங்கு விரிகின்றன வென்று ஆலோசித்தல் மந்திரம் எனப்படும்.

21 . மனம் அடங்குவதற்கு தியானமாகிலும் ஏதேனும் உண்டோ?
உண்டு. தியானம் என்பதற்கு கியானம், ஞானமென்னும் பொருளைத் தரும், அதாவது மனதைப் பேராசையிற் செல்லவிடாமலும், பொறமையில் சூழவிடாமலும், வஞ்சினத்தில் நிலைக்கவிடாமலும், காம இச்சையில் விழவிடாமலும், ஜாக்கிரதையாக ஆண்டுவரும் அறிவுக்கு தியானம் எனப்படும்.

22 . மனம் அடங்குவதற்குப் பூசைகள் ஏதேனும் உண்டோ?
இல்லை. பூசையென்பதும், பூசனையென்பதும், பூசலென்பதும் தேகத்தை தடவலென்னும் பொருளைத்தரும். அதாவது கல்வியை கற்பிக்கும் குருவையானாலும், கை தொழிலை கற்பிக்கும் குருவையானாலும், ஞானத்தை போதிக்கும் குருவையானாலும் நெருங்கி அவருடைய கை, கால் முதலிய அவயங்களைப் பிடித்தலுக்கு பூசதலென்று பெயர். இவ்வகை பூசைக்கும் மனதுக்கும் யாதொரு சம்பந்தமில்லை.

23 . அருகமதம் வேறு, புத்த மதம் வேறென்று கூறுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வட தேசங்களில் உள்ளவர்கள் புத்தரென்றும், தென் தேசங்களில் உள்ளவர்கள் அருகரென்றும் (பல காரியத்திலும் நானகருனல்ல என்றும்) வழங்கி வருகின்றார்கள்.

24 . சமணமதம் என்பது என்ன?
புத்த தருமத்தை அனுசரித்து சங்கங்களில் சேர்ந்து மடத்தில் வாழ்கிறவர்கள் சகல சீவராசிகளின் பேரிலும் அன்புவைத்து சமமனமுண்டாகி வாழ்ந்தவர்கள் ஆகையால் சமனர் என்றும் சமணாள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.

26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.

27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்.

28 . ஜைன மாதம் என்பது என்ன?
புத்தருடைய ஆயிர நாமங்களில் ஜைரரென்னும் பெயரும் அடங்கியிருக்கின்றன. அப்பெயரை வகுத்திக்குங் கூட்டத்தார் புத்த தருமத்திற்கு சிலவற்றையும் வேட பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கும் மதக்கட்டுப்பாடுகளிற் சிலவற்றையும் அனுசரித்துக்கொண்டு ஜைத மதத்தரென வழங்கி வருகிறார்கள்.

29 . சின்னசாமி என்ற பெயரும் அதற்கெதிர் பெரியசாமி என்ற பெயரும் பௌத்தர்கள் வழங்குவதின் காரணம் என்ன?
தமிழ்மொழில் (ஜினசாமி) யாகிய புத்தரை சினசாமி சின்னசாமி சின்னச்சாமி என்றும் சாமிகட்கெல்லாம் முதலுமதிகாரியு மானதால் மகாசாமி என்றும் பெரியசாமி என்றும் வழங்குகிறார்கள். இதன் அர்த்தமுணராதார் சாமியில் சின்னதும் பெரியதும் உண்டோ என்று கேழ்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக