வியாழன், மார்ச் 10, 2022

இளமங்கலம்

மைவிடம்

இளமங்கலம் கிராமம், விழுக்கம் அடுத்த கிராமம் இளமங்கலம், 

மைலயம் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, திண்டிவனம் வட்டம், 

விழுப்புரம் மாவட்டம்.


தொலைவு

திண்டிவனம் - இளமங்கலம் 18.50 கி.மீ

திண்டிவனம்-புளியனுர் செல்லும் பேருந்துகள் இளமங்கலம் நிற்கும். திண்டிவனத்திலிருந்து  இளமங்கலத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து செல்லும்.

திண்டிவனம் - விழுக்கம் 15.40 கி.மீ

திண்டிவனம்- செஞ்சி செல்லும் பேருந்துகள் விழுக்கம் முதன்மைச் சாலை செல்லும். இங்கிருந்து இளமங்கலத்திற்கு மாற்று வழியில் (Auto Rickshaw) செல்லலாம்.

திண்டிவனம் - தீவனுர் 13.10 கி.மீ

திண்டிவனம்-திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தீவனுர் செல்லும். இங்கிருந்து மாற்று வழியில் இளமங்கலத்திற்கு செல்லலாம்.


வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர் 

தமிழகத்தில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை, தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பௌத்த கோவில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கல்வெட்டாக இளமங்கலம் கல்வேட்டு உள்ளது. இளமங்கலம் என்ற இந்த ஊர் பெயர் தொடர் இயக்கமாக 1300 வருடமாக இந்த ஊர் பெயர் மாறாமல் அப்படியே இருக்கிறது.

.01. உச்சி பிள்ளையாா் கோயில் 

30 அடி உயரமுள்ள தட்டை பாறையின் மீது சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது பிள்ளையார் கோவில். உச்சி பிள்ளையாா் கோயில் படிக்கட்டு அருகே பௌத்த கோயில் குறித்த செய்தியைக் கூறும் அரிய வகை கல்வெட்டு உள்ளது. 


கல்வெட்டு

10 அடி உயரமுள்ள சதுர பலகை கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரி கல்வெட்டு உள்ளது. ஸ்ரீ கோவிசைய என தொடங்கும் இந்த கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் 14ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி.745 ஆம் ஆண்டு சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றினி எடுப்பித்து, அத்தனிக்கு நந்தவனம் செய்து தந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அருவாரையர் காட்டிகன் மகன் கல்லறையோன் என்பவர் செய்ததாகவும், இத்தருமத்தை காப்பவர்களின் பாதத்தை தன் முடிமேல் வைத்து தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தருமசக்கரம் 

இந்த தருமசக்கரம் 16 கம்பிகளை கொண்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சக்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துாபியில் உள்ள தர்மசக்கரத்தை ஒத்து உள்ளது, இதே போன்ற சக்கர ஸ்துாபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள தேசூரிலும், சென்னை அடுத்த திருவிற்கோலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

திருவடிகள்
கல்வெட்டில் பெரும்பாலும் சிவனுக்கு அல்லது பெருமாளுக்கு அல்லது சமணற்கு  என்று குறிப்பிட்டு இருப்பர். ஆனால் இந்த  கல்வெட்டில் அவ்வாறு குறிப்பிடாமல் திருவடிகளுக்கு இத்தலி எழுப்பித்து என்று குறிப்பிட்டுள்ளது. பாதத்தை வணங்குவது பௌத்தத்திலும், சமணத்திலும் வைணவத்திலும் உள்ளது.
 
திருவடிகள் தரவுகள் இங்கு உள்ளதா என்று பார்த்தபொழுது இங்குள்ள பஜனை கோவில் 1987ல் தான் கட்டப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து வைஷ்ணவத்தை குறிப்பிடும் தரவுகள் ஏதும் இல்லை. அனந்தநாதர் கோவில் என்னும் சமணர் கோவில் ஒன்று இங்குள்ளது. அந்த மூலவர் 1000 வருடம் பழமையானது. இக்கோவிலில் ஒரு பதமும் உள்ளது. 1976ல் இங்கு வந்தவர் ஒருவரின் பாதத்தை வைத்து வணங்குகின்றனர். சைவ சமயத்தில் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது. எனவே இத்திருவடி பௌத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சொல்ல முடியம். இது தான் என்று அறிதிட்டு கூறமுடியாது 

 தருமராஜா திட்டு

இளமங்கலம் ஊரை சேர்ந்த மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், தர்மகர்த்தா சாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபாட்டில் உள்ளது. மாந்தன், மாந்தியுடன் காணப்படும் இச்சிற்பத்தில் தவ்வையின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைதியை வைத்து இதன் மூலம் 8ம் நுாற்றாண்டாக கருதலாம். செய்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து கோலமிட்டு பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.


பிரம்ம சாஸ்தா

இளமங்கலம் ஏரிக்கரையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பிரம்ம சாஸ்தா சிற்பம், எட்டு பட்டை கொண்ட சிதைந்த லிங்கத்தின் ஆவுடை மற்றும் தலையில்லா சிறிய சிலை ஒன்றும் உள்ளது. 
 
ஏரியில் உள்ள சிலையை அம்மன் சிலை என்று தவறாக சொல்கின்றனர். 5 அடியில் உள்ள ஒரு பிரம்ம சாஸ்தா கையில் அக்கமாலை, வீரசங்கிலி அணிந்து காட்சிதருகிறார். இவர் முருகர். தான். கையில் அக்கமாலை என்கிற ஜபமாலை சாவடி போன்ற இரண்டு அணிகலன்கள் அணிந்துள்ளார். போர் வீரர் என்பதை காட்டும் சன்ன வீரம் என்ற வீர சங்கிலி. அவரது இடையில் உதர பந்தம் என்கிற பட்டையான (Blet) அணிந்துள்ளார். வலது அபய முத்திரையுடன் உள்ளது. இன்னொரு கை அவர் தன் ஆடை மீது வைத்துள்ளார்.

பிரம்ம சாஸ்தா அருகில் ஒரு ஆவுடை உள்ளது 3 அடி சுற்றளவு கொண்டது. இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோவில் ஏரிக்கரை ஓரம் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது. இதன் காலம் 9ம் நூற்றாண்டாகக் கருதலாம். 



ராஜ்பன்னீர் அவர்கள் பௌத்த சமயத்தை சார்ந்தது என கூற காரணங்கள்

01. கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் பௌத்தம் சமயம் சார்ந்ததாகத் தான் உள்ளது.  

01. பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது.  

சமணத்தில் பாத வழிபாடுகள் இருந்த பொழுதிலும் இவ்வூரில் உள்ள அனந்தநாதர் கோவில் மிகவும் பிற்காலத்தவையே. அவ்வூருக்கு 1976ம் வருடம் வருகைபுரிந்த ஹரிராஜ் முனிகள் நினைவாகப் பாதம் வைத்து வழிபடுகின்றனர். எனவே சமணமாகக் கருதும் வாய்ப்பு குறைவே.

சைவ சமயத்தில் சக்கரம் மற்றும் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது.

03.இவ்வூரில் 1987 ம் வருடத்தில் கட்டிய பஜனை கோவில் என்ற பெருமாள் கோவிலைத் தவிர வைணவம் சார்ந்த தரவுகள் சுற்று வட்டாரத்தில் இல்லை என்பதால் வைணவமாகக் கருத வாய்ப்பில்லை.

04. இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம் , இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்லாடல் உடைய ஊர்ப்பெயர்கள் உள்ளது.

05.பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக 7 மற்றும் 8 நூற்றாண்டில் காஞ்சியிலும் , நாகையிலும் பௌத்தம் சிறப்புற்று விளங்கிய ஏராளமான சான்றுகள் உள்ளது. குறிப்பாகச் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரம் பகுதியிலிருந்த பௌத்த விகார்களை பற்றி தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

06.  பௌத்தர்கள் வணிக தொடர்பு உடையவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த தடையங்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டி அமைந்த ஊராகும். 

07. இங்கே கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கையில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தானமானது பௌத்த கோவிலுக்கு தந்த தானமாகவே கருத முடியும். இதன் மூலம் இரண்டாம் நந்திவர்மன் காலம் வரையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்துள்ளதை அறியமுடிகிறது. 

 

விடுபட்ட தகவல்கள்

விழுக்கம் கிராமத்திலுள்ள உறவினர் ராமு என்பவருடன் 14/02/22 அன்று இளமங்கலம் சென்றோம்.  உச்சி பிள்ளையாா் கோயில், தருமராஜா திட்டு மற்றும் பிரம்ம சாஸ்தா இவை இளமங்கலம் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளது.

01. முனுசாமி அவர்களின் வீட்டின் பின்புறமுள்ள இடத்தில் உள்ள பல்லவர் காலத்து மூத்த தேவியை பார்த்தோம். அவர் அளித்த தகவல்கள். இவ்விடத்திற்கு தருமராஜா திட்டு என்று பெயர். இங்கு கிணறு வெட்டியபோது இச்சிலை கிடைத்தது. இக்கிணறு எப்பொழுது வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. தங்களின் சிறுவயது முதல் இச்சிலையை பார்த்துவருவதாகவும் சொல்கின்றனர். கிணறு அருகே வைத்து இன்றும் வணங்கி வந்துகொண்டு இருக்கின்றனர்.  

02. ஏரிக்கரை அருகில் உள்ள திரு சேகர் என்பவரின் வயலில் இரு சிலைகளை பார்த்தோம். இரண்டும் நின்ற நிலையில் உள்ள சிலைகள். ஒன்று சிறிய சிலை மற்றொன்று பெரிய சிலை. சிறிய சிலை தலையின்றி  இருந்தது. ஒரு கையுமில்லை. கழுத்து பகுதியில் இருந்து இடுப்பு பகுதி வரை (ஒரு அடி உயரமுள்ள சிலை) மண்ணிற்கு மேல் உள்ளது. கால் மற்றும் பிற பகுதி மண்ணில் புதைந்துள்ளது.

 03. தவ்வை சிலைக்கு எதிரே உள்ள சிலை


பிற இணைப்புகள் 

பல்லவ மன்னன் கட்டிய புத்தர் கோவில் - மிக மிக அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு 

செஞ்சி அருகே பௌத்த கோயில் குறித்து கூறும் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!