புதன், செப்டம்பர் 13, 2017

பரிநிப்பாணமும் மரணமும் ஒன்றா?


நிப்பாணம் (Nibbana) என்பது பாலி மொழி சொல். நிர்வாணம் (Nirvana) என்பது வடமொழி சொல். இந்த இரு சொற்களையும் பௌத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. நிப்பாணம் என்னும் பாலிமொழி சொல்லை தேராவத பௌத்தத்திலும் நிர்வாணம் என்னும் வடமொழி சொல்லை மகாயானா பௌத்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பௌத்தத்தில் சொல்லப்படும் நிப்பாணம்/நிர்வாணம் என்ற இரு சொற்களின் பொருள் ஒன்றே. ஆனால் பௌத்தத்திலும் வைதீகத்திலும் சொல்லப்படும் நிர்வாணம் என்ற சொல்லின் பொருள் வேறுபாடு கொண்டது.

நிப்பாணம்
நிப்பாணம் என்றால்  கம்மாக்கள் அழிவுறுத்தல். கம்மாக்கள் அழிவுறுகிறது ஆனால் உடல் எஞ்சியுள்ளது. விளைவுகளை ஏற்படுத்தும் செயல்கள் அழிவதால் துன்பங்களும் முற்றுப்பெறுகிறது (End of sufferings). கனவுகளற்ற நல்லுறக்கம் மனமாசுகளையற்ற உள்ள சமநிலையில் இருப்பது நிப்பாணம்.

கம்மா என்பது விளைவுகளை ஏற்படுத்தும் செயல்கள். கம்மாவை மேலும் விரிவாக பார்க்க  . மனிதர்களை   பற்றுடையவர்கள்  மற்றும்  பற்றறுத்தவர்  என  இரு வகையாக பிரிக்கலாம். 
01.பற்றுடையவர்கள் அதாவது சம்சார (Samsara) வாழ்வில் இருப்பவர்கள். பற்றுடையவர்களின் செயல்கள் தமக்கும் பிறருக்கும் நன்மையை அல்லது தீமையை அளிக்கும். நற்செயலை செய்யும் பொழுது நன்மையையும் தீய செயலை செய்யும் பொழுது தீமையையும் பெறுபவர்கள்.
02.பற்றறுத்தவர் அதாவது நிப்பாணத்தை அடைந்தவர்கள். நிப்பாணத்தை அடைந்தவர்களின் செயல்கள் எதிர்வினையற்ற செயல். எனவே பற்றறுத்தவர்களின் செயல்கள், செய்பவருக்கு நன்மையையோ அல்லது தீமையையே அளிக்காது, ஆனால் பெறுபவருக்கு நன்மையை அளிக்கும்.  
பரிநிப்பாணம்
நிப்பாணம் அடைந்தவரே பரிநிப்பாணத்தை அடைய முடியும். பரிநிப்பாணம் என்றால் முழு அழிவு. கம்மாக்கள் அழிவுற்று எஞ்சியிருக்கும் உடலும்  அழிந்து போதல்  பரிநிப்பாணம். 

மரணத்திற்கும் பரிநிப்பாணத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
01. பற்றுடையவர்கள் உயிர் நீத்தல் மரணமாகும். மக்களும் போதி சத்துவர்களும் உயிர் நீத்தல் என்பது மரணமாகும் (Death). போதி சாத்துவார்கள் முழு நிப்பாணத்தை அடையவில்லை. அவர்கள் நிப்பாண பேற்றை மக்களின் நலனுக்காக தள்ளிப்போட்டவர்கள். எனவே அவர்களின் மரணமும் மரணம் தான் பரிநிர்வாணமாகாது. 
(பற்றறுத்தவர்) நிப்பாணத்தை அடைந்தவர்களின் மரணம் தான் பரிநிப்பாணமாகும். அரகந்தர்கள் மற்றும் சம்மாசம்புத்தா அவர்களின் மரணம்  பரிநிப்பாணமாகும்.

The 14-metre statue of Buddha in Mahaparinibbana  in Bhamala Stupa in Khanpur, Haripur district, Pakistan -1800 years old 

பகவன் புத்தரின் மரணம் என்பது மகாபரிநிப்பாணமாகும். மகாபரிநிப்பாணம் என்பது பகவன் புத்தருக்கு மட்டுமே உரிய சொல் ஏனெனில் அரகந்தர்கள் பகவன் புத்தர் காட்டிய வழி சென்று நிப்பாணம் அடைந்தார்கள். பகவன் புத்தரோ தாம் கண்டறிந்த வழியில் சென்று பரிநிப்பாணம் அடைந்தார். எனவே புத்தரின் பரிநிப்பாணம் மகாபரிநிப்பாணம் என்று அழைக்கப்படுகிறது
02.பற்றுடையவர்களின் மரணம் என்பது உடல் அழிந்து அதன் மூலப்பொருள்கள் அதனை ஒத்த மூலப்பொருள்களுடன் இணைந்து விடும். எனவே பற்றுடையவர்களின் மரணம் மறுபிறப்பை உருவாக்கும். (மக்கள் மற்றும் போதி சத்துவர்கள்). 
பற்றறுத்தவர்களின் மரணம் என்பது உடல் அழிவது போன்று அந்த உடலின் மூலப்பொருள்களும் முழுமையாக அழிந்து விடுகிறது. எனவே பரிநிப்பாணத்தை அடைந்தவர்கள் மறுபிறப்பு அற்றவர்கள்.