செவ்வாய், அக்டோபர் 11, 2011

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?

இல்லை, இல்லவேயில்லை.
புத்தர் மகாவிஷ்ணுவின்  அவதாரமென கூறுவது புத்தரை 
இழிவுபடுத்துவதாகும்.

பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்
  • 15 -10 -1956 -அறிவர் அண்ணல் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவிய போது அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளில் 5வது உறுதிமொழி

01. புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் எனக் கூறுவதின் காரணமென்ன?
1.பௌத்தத்தை அது தோன்றிய இந்திய மண்ணிலிருந்து அகற்ற பயன்படுத்திய பொய்க்கருத்து தான் புத்தர் விஷ்ணுவின் அவதாரமென்பது.
2. பௌத்த தருமக்  கேழ்வியிலிருந்த குடிகள் புத்தர் என்றும் அழகர் என்றும் அரங்கர் என்றும் தருமர் என்றும் வழங்கி பகவனை பற்றி விசாரிக்கும்  காரணம் கொண்டு புத்தரே விஷ்ணு என்றும் விஷ்ணுவே புத்த அவதாரம் என்றும் புராணமேற்ப்படுத்தி புத்தா பாதமே விஷ்ணு பாதம் விஷ்ணு பாதமே புத்தா பாதம் என்றும் கூறி பொய்யிற்க்கு பொய்யை முட்டுக் கொடுத்து பொய்யையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றனர். மெய் மெய்யென விளங்கும் சத்திய பெருஞ்சரித்திரத்துடன் தங்களது பொய்க் கதைகளையும் சேர்த்து மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமென்று நோக்கம். 
3.புத்தரால் அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதை ஒழிக்கவே அவதாரக்கதைகள்.  எனவே தான் புத்தர் நாள் வைதிகர்களுக்குப் பகை நாளாகும்.

02. புத்தர் கடவுளோ அவதாரமே இல்லையெனில் புத்தரென்பவர் யார்?
http://elambodhi.blogspot.com/2011/08/1.html -பிறப்பு கி.மு 563 பரி நிர்வாணம் கி.மு 483
1.யாரும் புத்தராக பிறந்திட முடியாது. சித்தார்த்த தாம்  தன்  முயற்சியினால் தான் புத்தரானார். புத்தர் என்பது மறுபிறப்பற்ற ஒரு   உயரிய பண்பும் அறிவார்ந்த நிலையும்.   
2.பகவன் புத்தர் ஓர் இயல்பான மனிதர், தமது வாழ்நாளில் எந்த ஒரு அற்புதங்களையும் செய்யாதவர்.
3.கடவுளை பற்றி கவலைப்பட வேண்டாம் மனிதனைப் பற்றி கவலைப்படு, அறிவுதான் முக்கியம், ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே, யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொல்லியவர்.காலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65
புத்தர் போதகர் (மார்க்கதத்தா) மட்டுமே மோட்சம்  அளிப்பவரல்ல (மோட்சதத்தா) 

03.புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமில்லை என மறுப்பதின் காரணமென்ன? 

பௌத்தமும் இந்து மதமும் வெவ்வேறானவை. முற்றிலும் முரண்பாடு உடையது.
1.இந்து மாதம் கடவுள், ஆன்மா, வருணங்கள், சாதிகள் ஆகியவற்றை நம்புகிறது. பௌத்தம் கடவுளை, ஆன்மாவை மறுக்கிறது, சமத்துவமின்மையின் மிகப்பெரிய எதிரியாகவுள்ளது. 
2.இந்து மதத்தில் தாங்கள் (அவதாரங்கள்) போதிப்பது கடவுளின்  சொல்லென்றும், பிழையற்றதென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் உண்மையும் இறுதியானதுமென்றும் உரிமை கொண்டாடினார்கள்.
ஆனால் பகவன் புத்தர் மேற்குறிப்பிட்ட எந்த உரிமையையும் கொண்டாடவில்லை. தனது போதனைகள் "காரண காரியத்தையும் அனுபவத்தையும்" அடிப்படையாக கொண்டதென்றும், தன்னை பின்பற்றுவார்கள் தனது போதனையை தான் கூறியதாலேயே பிழையற்றதென்று ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சிந்தனை சுதந்திரத்தை அளித்தார்.  
மேலும் பௌத்தம் எக்காலத்திலும் விஞ்ஞானத்துடன் முரண்படுவது கிடையாது. பௌத்த நூல் தொகுப்பினுடைய ஏதாவது ஒரு அறிக்கை, நவின விஞ்ஞான அறிவுக்கு முரண்பட்டு இருந்தால் அதை நூல்தொகுப்பிலிருந்து விலக்குவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.
3. கடவுள் தன் உருவாக்கத்தில் தூயவராகயிருக்க வேண்டுமென்பது அவதாரக் கோட்பாட்டுக்கு அவசியமில்லை. கடவுள் மிகவும் மாசுடையிராகவும் ஒழுக்கமற்ற செயற்பாடு உடையவராகவும் இருக்கலாம். ஒழுக்கமே புத்தரின் மதமாகும். ஒழுக்கமில்லையென்றால் புத்தமதம் ஒன்றுமில்லாதது ஆகும். புத்த மதத்தில் கடவுளுக்கு பதிலாக அங்கு ஒழுக்கம் இருக்கிறது. 
4. இந்து என்போர் யார் என்னும் வினாவிற்கு ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப்பார்ப்பதே அதற்க்கு விடையின்றி வேறு மறுமொழி ஒன்றும் கிடையாது. புத்தரென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் பௌத்தர்களானார். கிறிஸ்துவென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் கிறிஸ்துவனார்கள். முகமது வென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் முகமதியர்களானர். அது போல் இவ்விந்து என்னும் புத்திரன் எவரும் இருந்ததில்லை 
இந்து என்ற சொல் இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இல்லாத சொல். எந்த புராண இதிகாசத்திலும் கையாளப்படாத சொல். 1799ல் சர். வில்லியம் ஜோன்சு உள்நாட்டு நீதி நெறிகளை தொகுத்து அதற்கு இந்து சட்டம் என்று பெயரிட்டார். அப்போது தான் இந்து என்ற சொல் முதன் முதலாக அரசு அங்கீகாரம் பெற்றது.
இந்து ஒரு சமய சார்புடைய சொல்லல்ல. கிறித்துவரல்லாத, இசுலாமியரல்லாத பார்சியல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரைவிலக்கணம் கொண்டு உள்ளது. 
5. இந்துக்கள் என்பவருக்குள் சாதி ஆச்சாரம் என்னும் பிரிவினைகள் உண்டு. பௌத்தர்களுக்கு அத்தகைய பிரிவினை பேதங்கள் கிடையாது.
6. இந்துக்கள் என்போர் அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை நெய் வேத்தியஞ் செய்து வந்தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பெளத்தர்களோ நன்மார்க்க நடையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போருக்கு முத்திய சுகமுடென்பார்கள்
7. இந்துக்கள் என்போர் சாதி சமய ஆச்சரத்தில் லைத்திருக்க வேண்டும். பெளத்தர்களோ பாவச் செயல்களை அகற்றி நன்மெய் கடைபிடித்து இதயசுத்தி உடையவர்களாகி சருவசீவர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும். 
8. இந்துக்கள் என்போர்களுக்கு தங்கள் சாதி ஆச்சாரங்களுக்கு தக்க சாதிப்பெயரும் தொடர்மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும் கழுத்திலும் சமய சின்னங்களாகும் விபுதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும். 
9. மீண்டும் மீண்டும் பிறப்பவரே மகாவிஷ்ணு. பகவன் புத்தர் மறுபிறப்பு அற்றவர். 
10. புத்தர் தனக்கு ஏற்படும் தீங்குகளைப் பெருந்தன்மையோடு போருத்துக்கொண்டர். அதனை மனதில் கொள்ளமாட்டார். வேதனை, அபாயம், அவமதிப்பு ஆகியவை அவரது மன அமைதியைக்குலைத்து விடவில்லை. உயிரை அழிக்கும் செயலுக்கு அப்பாற்பட்டவர். அவர் தடியையும் வாளையும் விலக்கி வைத்தார். கேடான செயல்களிருந்தும் பாலியல் நடத்தைகளிருந்தும் அவர் விலகி நின்றார். எப்போதும் உண்மையே பேசுவார். பிரிந்து கிடப்பவர்களை ஒன்று சேர்க்க பிரயத்தனம் செய்வார். கடுஞ்சொல் பேசமாட்டார். கனிவான மொழி பேசுவார். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்வார். இரவில் உண்பதில்லை நடனம், பாட்டு அலங்காரம் செய்து கொள்வதில்லை.
ஆனால் இதற்கு நேர் மாறானவர் மஹா விஷ்ணு. விஷ்ணு சக்கரம் என்ற ஆபத்தான ஆயுதத்தை தாங்கியவர். பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களை அந்தச் சக்கரத்தின் மூலமாக அழிப்பவர். பாம்பின் விஷத்தை விட கொடியவர். மனித தன்மையை மீறியவர். கலகங்களை ஒடுக்குவதில் இறக்கமற்றவர். பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவர்.
    
04. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமில்லையெனில் வைதிக நூல்களில் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறிப்பிட்டபட்டுள்ளது எங்ஙனம்?

பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியர்களின் பரம்பரை வேதங்களிலிருந்தோ உபநிடதங்ககளிலிருந்தோ தோன்றியதன்று. அது வேத காலத்துக்கு முன்னரே மத்திய இந்தியாவில் விளங்கிய ரிஷிமுனிவர்களின் பரம்பரையிலிருந்து தோன்றியது.

புராணங்கள் 
புராண இதிகாசங்கள் என்பவை சரித்திரங்கள் அல்ல. அவை கற்பனை கதை. 100 க்கு 75 புராணங்கள் புத்தருக்கு பின்னால் தான் எழுதப்பட்டது. இராமாயணம் எழுதியதும் மகாபாரதம் எழுதியதும் புத்தருக்கு பின் தான் தந்தை பெரியார்.

புராணங்களை  எழுதியவர்கள் சூதர்கள் தான். பிராமணர்கள் அல்ல. 
ஒரு காலக் கட்டத்தில் திடிரேன பார்பனர்கள் முனைந்து சூதர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு புராணங்களை எழுதும் உரிமையைத் தாங்களே ஏகபோகமாக எடுத்துகொண்டார்கள். இதனால் புராண ஆசிரியர்கள் பெயரிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது சூதர்களுக்கு பதிலாக பிராமணர்கள் புராணங்களின் ஆசிரியர்களாகிவிட்டனர்.

புராணம்  அதன் இடைப்பட்ட காலம்
01.மார்கண்டேய                           கி பி 200 - 400
02.வாயு                                            கி பி 200 - 500
03.பிரம்மானந்த                            கி பி 200 - 500
04.விஷ்ணு                                     கி பி 100 - 350
05.மச்சய                                         கி பி 325
06.பாகவத                                      கி பி 500 - 600
07.கூர்ம                                           கி பி 550 - 1000
08.வாமன                                       கி பி 700 - 1000
09.லிங்க                                          கி பி 600 - 1000
10.வராக                                          கி பி 800 - 1500
11.பத்ம                                            கி பி 600 - 950
12.பிரஹ நாரதிய                       கி பி 875 - 1000
13.அக்னி                                        கி பி 800 - 900
14.கருட                                          கி பி 850 - 1000
15.பிரம்ம                                       கி பி 900 - 1000
16.ஸ்கந்த                                     கி பி 700 பிறகு
17.பிரம்ம வைவரத                  கி பி 700 பிறகு
18.பவிஸ்ய                                  கி பி 500 பிறகு
ஹஸரா (புராணங்களின் காலத்தை கணித்தவர்)

இராமாயணம்
இன்றுள்ள இராமாயணம்  வால்மீகி இராமாயணமல்ல. இராமாயண பாடல்கள் ஒன்றுக்கொன்று உடன்பட்டு வரவில்லை பழைய புதிய கருத்துக்கள் அடுத்தடுத்து வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  - திரு சி. வி வைத்யா
தொடக்கத்தில் அது இராவணன் இராமனுடைய மனைவி சீதையை அபகரிக்க சென்றதால் இராமனுக்கும் இராவணனுக்குமிடையே ஏற்ப்பட்ட போரைப் பற்றிய ஒரு சிறிய கதையாக இருந்தது. இரண்டவது பதிப்பில் அது நீதியை போதிக்கும் ஒரு கதையாக ஆகியது. மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும்  ஓர் உபதேச நூலக மாறியது.  
மூன்றாவது பதிப்பில் தொல் கதைகள், அறிவு, கல்வி, தத்துவங்கள் மற்றும் கலை, அறிவியல் முதலிய அனைத்தை யும் கொண்ட ஒரு நூலக மாறியது.

மகாபாரதம்
பற்பல இடைச்சொருகல்களினால் மகாபாரதம் பெருக்கமானது.
• மகாபாரதத்தின் மூலம் வியாசாரால் எழுதப்பெற்றதாகும் . இவர் இதற்கு கொடுத்த தலைப்பு 'ஜெயம்' என்பதே. பாடல்கள் 8800 - கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி கூறும் ஓர் நூல்.
• இரண்டாவது பதிப்பு 'பாரதம்'- வைசம்பாயணர் என்பவரால் வெளியிடப்பட்டது. பாடல்கள் 24000- பல்வேறு உபதேசங்கள்  இடம்  பெற்றுவிட்டன. 
• சவுதி வைசம்பாயணரின் நூலை முழுவதுமாக திருத்தியமைத்து "மகாபாரதம்" என்ற தலைப்பில் வெளியிட்டார். பாடல்கள் 96836 - பல தொல் கதைகள் இணைத்து வெளியிட்டார். அரசியல், புவியல், வில்வித்தை முதலிய பல்வேறு கலைகளையும் இணைத்து வெளியிட்டார்.

மகாபாரத காலம்
• கி.பி 200க்கும் கி.பி 400க்கும் இடைப்பட்ட காலம் -பேரசிரியர் ஹாப்கின்ஸ்
• மகாபாரதத்தில் ஹூணர்களைப் பற்றி குறிப்புள்ளது. தோரயமாக கி.பி 455ல் ஸ்கந்த குப்தன் ஹூனர்களை தோற்கடித்தான்.
19 வது அத்தியாயம் வனப்பருவம் பாடல் 29 "இந்த உலகம் முழுவதுமே இஸ்லாமிய உலகமாக மாறிவிடும், இதனால் யாகங்கள் புனிதமான சடங்குகள், சமய விழாக்கள் யாவுமே அற்றுப்போகும்"
மேலும் வனப்பருவத்தில் பாடல் 65, 66 & 67 மக்கள் யாதுகாக்களை வழிபட முற்படுவார்கள்" என்று கூறப்படுகிறது. இதுகா என்ற சொல் யாதுகாவாக மறுவி உச்சரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒரு சுவற்றின் முன் நின்று பிராத்தனை செய்வார்கள் அதுவே "இதுகா" எனப்படும் -கோசாம்பி.
இந்தியாவின் மீது முகம்மது காசிம் என்பவன் கி.பி 712 ல் நடத்திய படையெடுப்புதான் முதல் இஸ்லாமிய படை எடுப்பாகும். இவனுக்கு பின் முகமது கஜினி படை எடுத்து வந்தான். இவன் இந்துக் கோவில்களையும் பௌத்த மடங்களையும் நாசப்படுத்தி கோவில் பூசாரிகளையும், பௌத்த பிக்குகளையும் படுகொலை செய்தான். ஆனால் அவன் மசூதிகளையோ பிராத்தனை சுவர்களையோ கட்டவில்லை. அவனுக்கு பின் வந்த முகமது கோரி தான் இதை செய்தான். இதிலிருந்து கி.பி 1200 வரை மகாபாரதம் எழுதி முடிக்கப்படவில்லை.
பகவத் கீதை
•பகவத் கீதையை யார் எழுதியது என்பது இதுவரை  யாருக்குமே தெரியாது. காலம்தோறும் பலர் கைக்கு மாறி பல்வேறு பதிப்புகளாக வெளிவந்தது.
• பகவத் கீதையில் வரும் பாடல்கள் பலர் எழுதியுள்ளனர். அதில் பலருக்கு இலக்கண விதிகளே தெரியவில்லை -பேரசிரியர் ராஜ்வதே.
•பகவத் கீதையிலுள்ள பாக்களில் மொத்தம் 60 பாக்கள் தான் மூலப்பாக்கள் மற்றவை பின்னால் எழுதி இடை சொருகல் செய்யப்பட்டவை - இராஜாராம் சாஸ்திரி
• 146 பாடல்கள் பகவத் கீதையில் பிற்காலத்தில் புதிதாகச் சேர்க்கப் பெற்றவையாகும். இவை மூலப்பாடல்களில் இல்லை. பேராசிரியர் கார்பே
கீதையின் காலம்  
• கி.பி 2ம் நூற்றண்டுக்கு முற்பட்டதாக இருக்க முடியாது -பேராசிரியர் கார்பே
• கி.பி 2ம் நூற்றாண்டில்  இவை எழுதப்பட்டிருக்க வேண்டும் - பேரசிரியர் உஷீத் &  திரு தொலங்கி
• பாலாத்திய அரசனுடைய காலத்தில் தான் பகவத் கீதை  இயற்றப்பற்றிருக்கவேண்டும். பாலத்தியன் குப்தா அரச மரபை சார்ந்தவன். கி.பி 467 ல் அரசு கட்டிலேறினான்.

o சங்கராச்சாரியார் (கி.பி 788 -882) பகவத் கீதைக்கு உரை எழுதுவதற்கு முன்னர் அது அத்தனை அறியப்படாத நூலாகவே இருந்தது.

o சந்திரஷித் என்பவர் தத்துவ சங்கிரகம் என்னும் ஆய்வு கட்டுரையைச் சங்கராச்சாரியார் பிறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதியுள்ளார். இந்தக் ஆய்வுக் கட்டுரையில் கீதை பற்றி குறிப்பிடவில்லை.

o விஜினவாதம் என்பது வசுபந்து தோற்றுவித்த ஒரு தத்துவம். இத்தத்துவம் பற்றி பிரம்ம சூத்திர பாஷியம் என்ற நூலில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திர பாஷியம் பற்றி பகவத் கீதையில் குறிப்பிடப்ட்டுள்ளது. எனவே பகவத் கீதை வசுபந்துக்கும் பிரம்ம சூத்திர பாஷியத்திற்கும் பிற்பட்டதாகவே இருக்கவேண்டும். வசுபந்து குப்த அரசன் பாலாத்தியனுக்கு குருவாக இருந்தவர்.

o பகவத் கீதை பாரதப் போருக்குச் சற்று முன்பாக பகவன் கிருஷ்ணனால் உபதேசிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆயினும் அந்தப் பகவானே பாரதக் கதைக்கு புதியவர். அப்போர் நடந்து பல நூற்றண்டுகள் கழித்தும் அந்தப் பகவனின் உயர்ந்த தெய்விகத் தலைமையை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதில் வழங்கும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்குறியது. பேரசிரியர் கோசாம்பி

o பகவத் கீதையில் கிருஷ்ணன் கடவுள் என்ற முறையில் தான் சதுர்வர்ண அமைப்பை உருவாக்கியதாக கூறுகிறார். அதாவது ஒருவருடைய உள்ளார்ந்த குணங்களுக்கு ஏற்ப ஒவொருவரின் தகுதியையும் தொழிலையும் அவர் நிர்ணயிக்கிறார். இந்த தத்துவம் புதியது. பழைய தத்துவத்தின் படி சதுர்வர்ணத்தின் அஸ்திவாரமானது வேதங்களின் ஆணையின் பேரில் இயற்றப்பட்டதகும். அறிவர் அண்ணல் அம்பேத்கர்

05. புத்தரை அவதாரமென கூறுபவர்கள் புத்தர் தருமம் சங்கம் ஆகிய மும்மணிகளுக்கு அவர்களின் பங்களிப்பு என்ன?

புத்தருடைய 32 முத்திரைகளில் முக்கியவற்றில் சிலவற்றை தங்கள் தேவதைகளின் (கடவுள்) கைகளிலும் உருவத்திலும் நாட்டினார்கள்.  பௌத்த விஹார்களையும் குகைகளையும் கைபற்றி சிதைத்து தங்கள் கடவுளை இடம் பெற செய்தது. பௌத்த நூல்களை அழித்தது. தங்களின் நூல்களில் புத்தரை மிக அவதூறாக எழுதிவைத்தது. பிக்குகளையும் பௌத்தர்களையும் கழுவேற்றியது, நாடு கடத்தியது.


11- நவம்பர்-1999 மாலை 3.30 மணியளவில் சாரநாத்தில்லுள்ள மகா போதி சங்க அலுவலகத்தில் பகவன் புத்தர் மகா விஷ்ணுவின் அவதாராம் என்ற பொய்யை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜகத்குரு சங்கரச்சாரியாவும் காஞ்சிபுரம் சங்கரமடத்தலைவர் ஜெயேந்திர சரசுவதிவும் விபாசன ஆசிரியர் S.N. கோயங்க  உடன் ஒரு ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்டு இருக்கின்றனர். http://www.vridhamma.org/en1999-13

இன்னும் ஏன்  இந்த பொய் பிரசாரம்.

நூல் குறிப்புகள்
01. அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II
      தொகுப்பாசிரியர் - ஞான. அலாய்சியஸ்
 02. பகவன் புத்தர் 
      தர்மானந்த கோசம்பி
 03. பண்டைய இந்தியா - பண்பாடும் நாகரிகமும்
      டி. டி கோசம்பி
 04. புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும்
      போதிசத்தா அறிவர் அண்ணல் அம்பேத்கர்
 05. அறிவர் பாபாசாகேப் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும்
      நூல் தொகுப்பு தொகுதி 7
 06. அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம்ம புரட்சி
       பரம்ய உருகேன் சங்கராக்ஷிதா
 07. புத்த நெறி
      தந்தை பெரியார்
 08. நான் ஏன் இந்து அல்ல
      காஞ்ச அய்லய்யா

1 கருத்து :

  1. எடுத்துக்காட்டுக்களுடன் குறிப்பிட்டுள்ளமை பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு