சனி, ஜூன் 25, 2011

பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அம்பேத்கரின் பங்கு

சென்னை பல்கலைக்கழகம், அறிவர் அண்ணல் அம்பேத்கர் மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு Dr . ஆ. பத்மநாபன் IAS (ஓய்வு) (முன்னாள் மேதகு ஆளுநர், மிசோரம் ) ஆற்றிய உரையின் சில துளிகள்.

01) பௌத்தத்தின் மறுமலர்ச்சி 1891ல் அநாகரிக தர்மபால ஆரம்பித்து வைத்தார். அதனை அறிவர் அண்ணல் அம்பேத்கர் 1956ல் அதன் உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 1891ம் ஆண்டு அறிவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பௌத்தத்தின் மறுமலர்ச்சியும் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும் ஒன்றாக நிகழ்ந்தது.

02) 1907ல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் மேட்ரிகுலேசன் தேறியபோது அவருடைய ஆசிரியர் கிறிஸ்ராஜ் அர்ஜுன் கேலூஸ்கர் என்பவர் மராத்தி மொழியில் எழுதப்பட்ட கௌதம புத்தரின் வரலாற்று நூலை அவருக்கு பரிசாக அளித்தார்.

03) நாசிக் பிரகடனம். நான் ஒரு இந்துவாக பிறந்து விட்டேன் ஆனால் நான் இறக்கும் பொழுது ஒரு இந்துவாக இருக்கமாட்டேன்.

04) பௌத்த சின்னங்களான தர்ம சக்கரத்தையும் சாரனாத்தில் அசோகரின் தூணில் இருந்த நான்கு சிங்கம் கொண்ட சின்னத்தையும் இந்திய தேசிய சின்னங்களாக மாற்றினார்.

05) 1945ல் மக்கள் கல்வி சங்கத்தை ஆரம்பித்தார். சித்தார்த்தா கல்லூரியை நிறுவினார். அவர் மாநாடு கூட்டிய இடத்திற்கு புத்தர் நகர் என்று பெயரிட்டார்.

06) ஔரங்கபாத்தில் பௌத்தம் தழுவிய கிரேக்க அரசர் மிரிலிண்டர் (அ) மியாண்ட என்பவரின் நினைவாக மிலாண்டு பலகலைகழகத்தை நிறுவினார்.

07) பேரசிரியர் பி.லட்சுமி நரசு அவர்கள் எழுதிய Essence of Buddhisim என்னும் பௌத்த சாரத்தை புதுப்பித்தார்.

08) இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களே கி.பி 4ம் நூற்றாண்டில் குப்தா மன்னர்களால் நசுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்று அறிவர் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.

09) 1950 மே மாதம் 3ம் நாள் டெல்லியில் பௌத்தர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்.

10)  புத்தரும் அவர் எதிர்கால சமயமும் என்னும் பொருள் பற்றி கல்கத்தாவில் இருந்து வெளிவந்த மகாபோதி பத்திரிக்கையில் எழுதினார்.

11)  1950 மே மாதம் 25 ம் நாள் - கண்டியில் புத்த பெருமானின் பல் இருக்கும் கோவிலில் உலக பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பௌத்த சமயத்தின் தோற்றமும் வீழ்ச்சியையும் பற்றி பேசினார்.

12)  தம் தொண்டர்களுக்கு பௌத்த உபாசனா என்ற பௌத்த சூத்திரங்களை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

13) 1954ல் பௌத்தத்தை பரப்புவதற்காக "Buddhist Society of India" இந்திய பௌத்த சங்கத்தை ஆரம்பித்தார்.

14) 1954ல் மே மாதம் 15நாள் - பர்மாவில் நடந்த புத்த ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார்.

15)  1954 ஜூன் மாதம் - பௌத்தத்தை போதிப்பதற்காக ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறினார்.

16)  1954 அக்டோபர் மாதம் - பர்மாவிற்கு சென்றார் அங்கு நடந்த உலக பௌத்த மாநாட்டில் அவர் கண்களில் நீர் தளும்ப " நான் மிக வேதனையுடன் கூறிக் கொள்கிறேன். இந்த மாபெரும் புத்தர் பெருமான் பிறந்த மண்ணில் பௌத்தம் அழிந்து விட்டது. இது எவ்வளவு வேதனை தரும் விஷயம் என்றார்.

17)  1954 டிசம்பர் மாதம் - பர்மாவில் இருந்தபோது மாண்டலே நகரத்தில் இருந்தபொழுது உலகபௌத்த கலாச்சார கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த Dr . R. L. சோனி என்பவருடன் தங்கிருந்தார். அவர் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் என்னுடைய தொண்டர்களுடன் பௌத்தத்தில் சேரப்போகிறேன் என்று கூறினார்.

18)  இந்தியாவிற்கு திரும்பிய பிறகு அவர் பௌத்த சங்கத்தை மாற்றி அமைத்தார்.

19)  மே மாதம் 1956ல் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் அக்டோபர் மாதம் பௌத்தம் தழுவபோவதாக கூறினார்.

20)  14 அக்டோபர் 1956 . அக்டோபர் 14ம் நாள் ஏன் தேர்ந்து எடுத்தார்?. அன்று தான் தர்ம விஜயம் செய்த அசோக சக்கரவர்த்தி பௌத்தம் தழுவினார். நாக்புரியை தேர்ந்து எடுக்க காரணம் அங்கு நாக் என்ற ஆறு ஓடியது. அதன் கரையில் நாகர்கள் என்ற பௌத்தர்கள் வாழ்ந்தார்கள்.

21) 14 அக்டோபர் 1956 ஞயிற்று கிழமை நான்கு இலட்சம் பேருடன் திரிசரணம்,பஞ்சசீலம் கூறி பௌத்தம் தழுவினார்கள். மறுநாள் ஒரு இலட்சம் பேர் பௌத்தம் தழுவினார்கள்.

22) அறிவர் அண்ணல் அம்பேத்கர் 22 உறுதி மொழிகளை தயாரித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

23)  15 அக்டோபர் 1956 அறிவர் அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தின் பிரிவுகளான வஜ்ராயனத்திலோ அல்லது மகாயனத்திலோ சேரப்போவதில்லை என்று புதிய பௌத்த சமயமான நவயானத்தில் சேரப்போவதாக கூறினார்.

24)  15 நவம்பர் 1956 லிருந்து 20 நவம்பர் 1956 வரை நான்காவது உலக பௌத்த மாநாடு காட்மன்டுவில் நடந்தபோது Dr. அம்பேத்கர் உரையாற்றினார். அந்த மாநாட்டின் தலைவர் Dr. மல்லசேகரா பேசும் போது சற்று ஒரு மாத்திற்கு முன்புதான் 14 அக்டோபர் 1956 ல் நாகபுரியில் ஒரு அதிசயம் நடந்தது. Dr. அம்பேத்கர் தலைமையின் கீழ் ஐந்து இலட்சம் மக்கள் பௌத்தத்தில் சேர்ந்தனர். உலக வரலாற்றில் இப்படி ஐந்து இலட்சம் மக்கள் ஒரே நிகழ்ச்சியில் ஒரு மதத்திற்கு மாறியது கிடையாது.

25) தமது கடைசி பயணத்தை புத்தகய, சாரநாத் மற்றும் குஷிநகர் முதலிய இடங்களுக்கு சென்றார்.

26) அறிவர் அண்ணல் அம்பேத்கரின் இறுதி நூல் "புத்தரும் அவர் தம்மமும்"



புதன், ஜூன் 08, 2011

துயரம் தருவது கடவுளா? அல்லது மனிதனா?

ராஜயோகம்  ஜூன் 2011  இதழ்

பக்கம் 44 -46




எல். டபிள்யு. விக்கிரமேனராஜா, கொலும்பு.

திங்கள், ஜூன் 06, 2011

புத்தரின் தத்துவம்



அவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை

அடியோடு ஒழிக்க ஞானி புத்தர்

துவளாத சீடர்களுள் ஒருவரான

துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப்

புவியெங்கும் அறவழியைப் பரப்பிவந்தார்

புத்தபிரான் கொள்கைதனை அகத்திலேற்ற!

தூயசீடர் ஒருசிற்றூர்க் கேகுங்காலைத்

தாகமாக இருந்ததனால் துவண்டு போனார்!

ஏழைப்பெண் ஒருத்தியாகக் கிணற்றி லாங்கே

ஏக்கமுடன் இறைத்துக் கொண்ட்டிருந்தாள் நீரை

தாழைபோல் செங்கரத்தை மருங்கே நீட்டித்

தாகம் தீர்! தண்ணீரே ஊற்று மென்றார்

வாழ்க்கையிலே அடிபட்ட அந்த மாதோ

வாய்திறந்து உரைக்கலானாள் உண்மைதன்னை

தாழ்குலத்தில் பிறந்தவர்யாம் ஐயா எங்கள்

தண்ணீரை அருந்துவீரோ என்றாள் தையல்

சாதிஏதும் கேட்டவில்லை இங்கே உன்றன்

சாத்திரமும் நானறியேன் தாழ்வு இல்லை!

போதி வேந்தன் குணசாந்தன் எந்தம் ஆசான்

போதித்த போதனையைக் கூறுகின்றேன்

நீதி நெறி தவறாத இந்த மண்ணில்

நிச்சயமாய் இழிகுலத்தார் எவருமிலர்

ஓதியது அறியுமுன்னே ஒன்று சொல்வேன்

உலகத்தில் ஒருகுலம்தான் உணர்கவேன்றார்
 புரட்சி கவி பாரதிதாசன்

புத்தவேட்டில் புத்த ஜெயந்தி





17-மே-2011 அன்று புத்தவேட்டில் புத்த ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 

இடம் : போரூரில் இருந்து கொன்றத்தூர் செல்லும் வழியில்  உள்ள  கோவூரை அடுத்த மூன்றாம் கட்டளை

பிக்கு - போதி பாலா - மதுரை
பிக்கு - சுமேதா - புதுவை
பிக்கு - வாசகா - புத்தவேடு ( திரிபுரவில் இருந்து வந்தவர்)

கொண்டாட்டத்தின் சாரம் :

01. கடவுள் அவதாரம், கடவுளின் தூதுவர் என்று தம்மை அறிமுகப்படுத்தியர்களின் மத்தியில் தம்மை இயல்பான மனிதர் என்று அறிமுகப்படுத்திகொண்டு முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தவர் பகவன் புத்தர்.

02. பல பெயர்களுடைய நதிகள் கடலில் சேர்ந்து சங்கமித்தபின் அந்நதிகளின் நீரை அடையாளப்படுத்த முடியாது. அவை சங்கமித்த கடலின் பெயரால் தான் அழைக்கப்படும். அதைப்போன்று தம்மை பௌத்தத்தில் இணைத்துக்கொள்வதால் அவர்கள் பௌத்தர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

03. சென்னை பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் பௌத்த பயிலுதலுக்கான சான்றிதழ் படிப்பை அறிமுபப்படுத்தியுள்ளது. ஆர்வளர்கள் காலதாமதமின்றி உடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏழை எளியவர் இப்படிப்பை பயில விருப்பமிருந்து பயிலதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவ பலர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். 

04. அறிஞர் அண்ணல் அம்பேத்கரின் பௌத்தத்திற்கான பங்களிப்பை நினைவு கூறப்பட்டது.

05. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மொட்டை அடிக்கப்படும். உடன் வரும் அனைவருக்கும் அன்று நண்பகல் உணவு அளிக்கப்படும் (கட்டணம் ஏதுமின்றி)

06. பொதிகை தொலைக்காட்சியிலிருந்து காணொளி மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருவர் வந்திருந்தனர், அன்றிரவு 8.30 மணி செய்தியில் புத்த ஜெயந்தி நிகழ்ச்சியும் ஒளிபரப்பட்டது.



வெள்ளி, ஜூன் 03, 2011

போதிசத்துவர் மற்றும் புத்தரின் கடைசி உணவு

போதிசத்துவரின் கடைசி உணவு


போதிசத்துவர் என்பவர் புத்தர் ஆகமுனையும் ஒருவர். அந்நிலையை அடைவதற்கு முந்திய நிலை. இளவரசர் சித்தார்த்தா தமது 29 வயதில் துன்பத்திற்கான காரணமும் அவற்றை நீக்கும் வழியையும் கண்டறிய துறவு பூண்டார். அப்பொழுது சித்தார்த்தா இரு வகையான சமணத்துறவிகள் இருந்ததை அறிந்தார்.

01 தியான (மனக்குவிப்பு) பயிற்சி செய்பவர்கள் ஒரு வகையினர்
02 உடலை வருத்தி பயிற்சி செய்பவர்கள் மாற்றோ வகையினர்.

வைசாலில் தியான மார்கத்தில் புகழ்பெற்று விளங்கியவர்களிடம் சென்று முழு திறன் எய்தினார்.
01 . ஆராதகலாம் என்பவரிடம் ஏழு தியான நிலைகள்
02 . உத்தக இராமபுத்ரர் என்பவரிடம் எட்டாவது தியான நிலை

இத்தியானத்தினால் துன்பத்திற்கான காரணமும் அவற்றை நீக்கும் வழியையும் அறியமுடியவில்லை என்பதால் இத்தியான முறையை விட்டு விட்டார்.

பின்னர் உடலை வருத்திகொள்வதின் மூலம் மனத்தில் உள்ள அழுக்குகளை அகற்றிட முடியும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தவர்களில் சிறந்த விளங்கியவர்களிடம் பயிற்சிபெற உருவேலத்தில் - காயாவில் உள்ள நிரஞ்சனை ஆற்றங்கரைக்கு சென்றார். 01. கொண்டண்ண, 02. பத்திய, 03.வாப்பா, 04, மகா நாமா, 05. அச்சாசி ஆகிய 5வரிடம் ஆறு வருடங்கள் வரை உடலை வருத்தி கொள்ளும் பயிற்சியை மேற்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு உணவு, சில சமயம் இருநாட்களுக்கு ஒரு முறை, எழு நாட்களுக்கு ஒரு முறை, 15நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றினார். குளிர்மிக்க மாதத்தின் பகலை எல்லாம் புதர்களுக்குள்ளும் இரவை எல்லாம் வெட்ட வெளியிழும், கோடைகாலத்தில் பகலை எல்லாம் சுட்டரிக்கும் சூரியனுக்கு நேர்கீழும், இரவை எல்லாம் அடர்ந்த புதர்களுக்குள்ளும், எலும்புகளை தலையாணையாய்க் கொண்டு இடுகாடுகளில் கூடப்படுத்தார். தன் வயிற்றை தொட்டு உணர எண்ணினால் அவர் தொட்டது முதுகெலும்பாய் இருந்தது. அவர் முதுகெலும்பைத் தொட்டு உணர எண்ணினால் வயிற்றைத்தான் அவரால் தொட முடிந்தது. அவ்வளவு தூரம் அவர் வயிறு முதுகெலும்போடு ஒட்டி இருந்தது. இதன் காரணமாய் அவர் எழுந்து நடப்பது கூட கடினமாகி விட்டது. மேலே அவர் எழுந்து கொள்ள முயற்சி செய்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவார்.

உடல் செயல்படுவதோ செயல்படாமல் இருப்பதோ மனதின் அதிகாரத்தின்படி தான். எனவே எண்ணங்களை கட்டுப்படுத்துவது மட்டுமே பொருத்தமானது என்பதால் கடும் விரத முயற்சியை கைவிட்டார். சோனானி என்பவரின் மகளான சுஜாதாவிற்கு அக்காட்டு பகுதியில் உள்ள அரச மரத்தின் தேவதையிடம் பெரும் நம்பிக்கை இருந்தது. இந்த தேவதையின் ஆசியால் தான் தமக்கு திருமணம் நிகழ்ந்தது யசன் என்னும் மகன் பிறந்தான் என்று நம்பிக்கை கொண்டு இருந்தாள். அத்தேவதைக்கு நன்றி செலுத்துவதற்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சேனா கிராமத்திற்கு வந்து அந்த அரச மர தேவதைக்கு மரியாதை செலுத்துவதுண்டு.


இம்முறை மிகவும் சுவையான பாயாசம் செய்து இருந்தாள். அரச மரத்தின் பகுதியை சுத்தம் செய்வதற்கு சுஜாதா தன் பணிப்பெண் புன்னாவை அனுப்பி வைத்தாள். அங்கே சென்ற பணிப்பெண் சித்தார்த்தர் அரச மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்து இருப்பதை கண்டாள். அவருடைய பளபளக்கும் முகத்தோற்றத்தையும் வசிகரிக்கும் ஆளுமையையும் கண்ட அந்த பெண் பரவசத்துடன் நின்று விட்டாள். மரதேவதையே உருவம் எடுத்து வந்திருப்பதாக ஒரு பிரம்மை ஏற்பட்டது அந்த பணிப்பெண்ணுக்கு. அவள் மகிழ்வோடு இந்த மங்கலமான செய்தியை சுஜாதாவிடம் கூறினாள். இதை கேட்டதும் பரவசம் அடைந்து தங்க பாத்திரத்தில் பாயசத்தை நிரப்பிகொண்டு சென்றாள். அவள் சித்தார்த்தரை பார்த்த உடனே தவம் மேற்கொள்ள வந்த துறவி என்று அவள் புரிந்து கொண்டாள். இளம் தியானியான சித்தார்தருக்கு பாயசம் படைத்து "தங்கள் தவம் முழுமை பெறட்டும்" என்று அவரை ஆசிர்வதித்தாள்.

போதிசத்துவரின் கடைசி உணவு இதுவாகவே இருந்தது. அடுத்த இரவு அவருக்கு சம்மா சம்போதி அதாவது பூரண ஞானத்தை அடைய வேண்டி இருந்தது. அதனால் தான் இந்த உணவு தானத்தை மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். சித்தார்த்தர் தம்முடைய 35 வயதில் புத்தர் ஆனார்.


புத்தரின் கடைசி உணவு
புத்தர் தொடர்ந்து 45 ஆண்டுகள் தம்மத்தை போதித்து வந்தார். போதிசத்துவற்கு உடலை வருத்தி கொள்ளும் பயிற்சி அளித்த அந்த 5வரே பகவன் புத்தரின் முதல் சீடர்கள் (பிக்குகள்) ஆவர். தமது 80வது வயதில் புத்தர் வைசாலி என்னும் இராசியத்தை அடுத்த ஓர் ஊரில் இருக்கையில் புத்தருக்கு உடல் நலக்கேடு ஏற்ப்பட்டது. இனி நாம் பிழைக்க மாட்டோம் என்று உணர்ந்து ஆனந்தரிடம் மற்ற பிக்குகளையும் வரவழைக்கும் படி செய்து தம் கருத்தை தெரிவித்தார். பின்னர் புத்தர் வைசாலியை விட்டு புறப்பட்டு பாவா என்னும் இடத்திற்கு சென்றார்.

உலோக வேலை செய்து கொண்டிருந்த சுந்தன் புத்தரையும் சங்கத்தினரையும் தன் வீட்டில் அன்று பகல் உணவருந்தி செல்ல வேண்டும் என்று மிகவும் வேண்டிக்கொண்டான். சுந்தனின் விருப்பத்திற்கு இணங்கி புத்தரும் பிக்குகளும் அன்று பகல் சுந்தனின் விட்டில் உணவு எடுத்துக் கொள்ள சென்றனர். புத்தர் சுந்தானிடம் சுகரமத்தவா (Sukaramaddava) என்ற உணவை தமக்கு மட்டும் பரிமாறும் படியும், பிக்குகளுக்கு வேறு உணவுவை பரிமாறும் படியும் கேட்டுக்கொண்டார். உணவுண்டு முடித்தபின் உயர்வெய்திய புத்தர் சுந்தானிடம் சுகரமத்தவா மீதம் ஏதும் இருந்தால் அவற்றை மண்ணில் புதைக்கும் படி கேட்டுக்கொண்டார்.பிறகு புத்தர் சுந்தாவிற்கு சமயம் பற்றி பேருரை நல்கினார்.

சுந்தாவால் அளிக்கப்பட உணவு புத்தருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர் உடல் நலம் கேட்டுப்போயிற்று. சீதபேதியால் அவதியுற்றார். கடுமையான தாங்க முடியாத துன்பத்திற்குள்ளானார். இறக்குமளவிற்கு அவர் உடல் நலம் கேடுற்றது. பின்னர் குசினரா என்னும் பட்டினத்தை நோக்கி சென்றனர். புத்தருக்கு தளர்ச்சியும், இளைப்பும் அதிகமாகி கொண்டே வந்தது. அதனால் அடிக்கடி இளைப்பாறும் பொருட்டு மரங்களின் அடியில் வீற்றிருந்து பின்னர் எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினார். அவர் இவ்விதம் சென்றுகொண்டிருக்கையில் அவர்க்கு நீர் வேட்கை ஏற்ப்பட்டது. புத்தர் ஆனந்தரிடம் தமக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். சற்று நேரத்திற்கு முன்தான் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கூட்டத்தார் சென்றதால் அருகில் இருக்கும் சிறிய குளத்தில் உள்ள தண்ணீர் கலக்கப்பட்டிருக்கும் என்று எண்ணி ஆனந்தர் உடனே சென்று தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் புத்தர் மேன் மேலும் தண்ணீர் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் ஆனந்தர் அக்குளத்திற்கு சென்று நீர் தெளிந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். தண்ணீர் கொணர்ந்து புத்தருக்கு கொடுத்தார். புத்தர் அந்நீரை பருகி களைப்புத் தீர்ந்தார். பின்னர் புத்தரும் பிக்குகளும் மெல்ல மெல்ல நடந்து சென்று குசினராவை அடைந்தார்கள்.

புத்தர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 3 மாத காலம் கடுமையான நோய்வாய்ப்பட்டு இருந்தார். அதனால் அவருடைய உடலில் வன்மை இல்லை சுந்தன் கொடுத்த உணவு அவருடைய பரிநிர்வாணத்திர்க்கு (இறத்தல்) நிமித்தமாயிற்று. ஆதலால் இதற்காக மக்கள் சுந்தன் என்ற கொல்லனை வீணாக பழிக்கலாகாது என்று புத்தர் கருதினார்.

பரிநிர்வாணத்திர்க்கு (இறப்பதற்கு) முன்பு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். சுந்தன் என்ற கொல்லனிடம் யாராவது, சுந்தா புத்தர் நீ கொடுத்த உணவை ஏற்று பரிநிர்வாணம் எய்தினார். இது உனக்கு பெருந்தீமை என்று கூறி மனத்துயரை உண்டாக்கினால் நீங்கள் அவனுடைய துயரை போக்குங்கள். சுந்தா உன் உணவை உண்டு புத்தர் பரிநிர்வாணம் எய்தியதனால் உன் தானம் உண்மையில் பயனுடையது. மற்ற தானத்தை விட புத்தருக்கு கிடைத்த இரண்டு தானங்கள் மிகப் பயனும் பெருமையும் வாய்ந்தவை என்று அவரே சொல்ல நாங்கள் கேட்டிருக்கிறோம் என்று புத்தர் கூறினார் .


~*~ ~*~ சுகரமத்தவா என்பதின் பொருள் திட்டவட்டமாக கூற முடியாமல் பலர் பல விதமாக குழப்பமான கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சுகரமத்தவா என்பது பூலால் உணவு என்றும் காளான் என்றும் பூண்டு மற்றும் செடிகள் போன்றவற்றால் ஆக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அகிம்சையை பேர் அறமாக கருதும் புத்தரும் அவர் கொள்கையை பின்பற்றுபவர்களும் இப்படி புலால் உண்டு ஒழுகுவது முரண்பாடாக உள்ளது. புத்தர் புலால் உண்டு இருக்கிறார் என்பதற்கு அங்குத்தரநிகாயத்தில் பஞ்சக நிபாதத்தில் சான்று கிடைக்கிறது.


நமக்காக உயிரைக் கொன்றதை நாம் பார்த்தாலோ, கேட்டாலோ, அப்படி சந்தேகம் உண்டாலோ அந்த உணவு விலக்கதக்கது என்றார் புத்தர். ஆகமந்தர் என்னும் பிராமணர், மீனையும் இறைச்சியையும் உண்ணுவதை தடை செய்யவில்லை என்பதை கேட்டு அதை உறுதி செய்துக்கொள்ள விரும்பி புத்தர் தங்கியிருந்த ஷராவஸ்தியில் சென்று கூறினார். கம்பு, அவரை, பட்டாணி, உண்ணத்தக்க இலைகள், கிழங்குகள், பழங்கள் ஆகியவற்றை நல்வழியில் பெற்று உண்ணும் நன்னெறியாளர் மகழ்ச்சிக்காக பொய் உரைப்பதிலை.

புத்தர் பதிலுரைத்தார்: தீயச் செயல்களே கவனத்துக்கு உரியது உணவன்று

உயிரெடுத்தல், அடித்தல், வெட்டுதல், அடக்குதல், பொய்கூறல், வஞ்சித்தல், ஏமாற்றுதல், தவறான காம ஒழுக்கம் இவையே தீமைகள். இறைச்சி உண்பதல்ல.

பேராசையாலோ, விரதத்தாலோ, உயிர்களைத் தாக்குபவர், தீமையிலே குறியாய் இருப்பவர் இவர்களே தீயவர். இறைச்சி உண்பதல்ல.

இறைச்சியும், மீனும் உண்பதில் இருந்து தவிர்த்தல் நிர்வாணமாய் இருத்தல் குடுமி வைத்தல், மழித்தல் உரோம உடை உடுத்தல் யாகத் தீ வளர்த்தல் எதிர்கால பேரின்பத்தை வங்கப் போதிய வழிமுறைகள் இவைகள் அன்று தன்னை வருத்தலும் வேள்வித்தீயில் தானப் பொருள் இடுதலும், சடங்குகளும் மனிதனை தூய்மை படுத்தி விடாது.

உங்கள் புலன்களை அடக்குங்கள் சக்தியை ஆளுங்கள் உண்மையை கண்டறியுங்கள் அனைத்துக் கட்டுகளையும் விட்ட தீமையை வென்ற துறவி தான் கண்பவற்றாலும் கேட்டவற்றாலும் களங்கப்படுவதில்லை இதைக்கேட்ட பிராமணர் தன்னை பிக்குவாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்

காலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65

கேஸபுத்த நகரத்தில் வசித்து வந்த காலாம என்னும் மக்கள் பல ஆன்மிக ஆசிரியர்களின் பிரகடனத்தால் மிகவும் குழம்பிப் போய் இருந்தார்கள். அப்பொழுது காலாமர்களுக்கு புத்தர் அளித்த போதனை தான் காலாம சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. குருட்டு நம்பிக்கைக்கும் பக்திக்கும் இடம் இல்லாமல் உலக வரலாற்றில் முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தார்.    

புத்தரின் காலாம சுத்தரத்தை பெரியாரும் தம்முடைய ஒவ்வொரு பகுத்தறிவு பிரச்சாரத்தின் போதும் பயன்படுத்தி உள்ளார். காலாம சூத்திரத்தை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம்முடைய குயிலில் உரைத்து.


நம்பாதே! ஒத்துக்கொள்ளாதே!
புத்தர் சொன்னவை!

பழைய நூல்கள் இப்படிப் பகர்ந்தன
என்பதால் எதையும் நம்பிவி டாதே
உண்மை என்றுநீ ஒப்பி டாதே

பெருநா ளாகப் பின்பற்றப் படுவது
வழக்க மாக இருந்து வருவதே
என்பதால் எதையும்நீ நம்பிவி டாதே
உண்மை என்றுநீ ஒப்பி டாதே

பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர்
இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்
என்பதால் எதையும்நீ நம்பிவி டாதே

பின்பற் றுவதால் நன்மை யில்லை
ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர்
இனிய பேச்சாளர் என்பதற் காக
எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்

ஒருவர் சொன்னதை உடன்ஆ ராய்ந்துபார்
அதனை அறிவினாற் சீர்தூக் கிட்டார்
அறிவினால் உணர்வினால் ஆய்க சரிஎனில்
அதனால் உனக்கும் அனைவ ருக்கும்
நன்மை உண்டெனில் நம்ப வேண்டும்

அதையே அயராது பின்பற்றி ஒழுகு
இவ்வுண் மைகளை ஏற்றுநீ நடந்தால்
மூடப் பழக்க ஒழுக்கம் ஒழியும்
சமையப் பொய்கள் அறிவினாற் சாகும்

இவையே புத்தர் பெருமான்
உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே!
குயில் -15-11-1960 

வியாழன், ஜூன் 02, 2011

புத்த மார்க்க வினா விடை-2

க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது

புத்த சுவாமி விவரம்

16. தற்காலத்திய வள்ளுவர்கள் ஆகிய சாக்கியர்கள் தங்கள் தெய்வத்தை மறவாது இருக்கின்றார்களா?
தங்களை தங்களே தெரியாதவர்கள் தங்களின் இனத்தை எங் கனந் தெரிந்துக்கொள்வார். ஆயினும் தங்கள் தெய்வத்தை மட்டும் முற்றும் உணராதவர்களாய் சில பெயர்களை மட்டும் விசாரித்து தாங்கள் பறையர்கள் அல்ல, வள்ளுவர்களே! என்று தனித்து இருக்கின்றார்கள்.

17. தற்காலம் வள்ளுவர்களும் பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்களா?
ஆம். வள்ளுவர்களைக்கொண்டே பறையர்கள் சகல காரியங்களையும் நடத்துகிறார்கள். பறையர்களுக்கு வள்ளுவர்கள் சகல உபகாரங்களையும் செய்து வருகின்றார்கள். ஆகவே பறையர்களுக்கு வள்ளுவர்களும், வள்ளுவர்களுக்கு பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்கள். நாளிது வரையிலும் பறையர் வள்ளுவர்களைத்தான் "ஐயர்" என்று வழங்குகிறார்கள்.

18. சக்கையர்கள் இவ்வகையாகத் தாழ்த்தப்பட்டு நிலை குலைவதற்கு முகாந்திரம் என்ன?
அன்னிய தேசங்களில் இருந்து இவ்விடம் வந்து குடியேறிய சில சாதியார் தாங்கள் சுய சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதக்கோட்பாடுகளுக்கும், புத்தருடைய ஞானநீதிகள் பெரிதும் நேர்விரோதமாய் இருந்தபடியால் புத்த மதத்தை நசித்துவிடவேண்டும் என்னும் கேட்ட எண்ணங்கொண்டு அம்மதத்தைச் சார்ந்து சுத்தசீலத்தில் மேன்மைப் பெற்றிருந்த சாக்கையர்கள் பறையர் என்றும் கீழ்சாதிகள் என்றும் வகுத்து சகல விஷயங்களிலும் தலை எடுக்க விடாமல் நசித்து வருகிறார்கள்.

19. பறையர் என்று வழங்கும்படியானக் கூட்டத்தார் பூர்வ காலத்தில் கல்வியிலும் நாகரிகத்திலும் ஒழுக்கத்திலும் மேன்மை பெற்று இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
திருக்குறள், ஞானகுறள், மூதுரை, ஞானவெட்டி, ஞானமதியுள்ளான் சிவவாக்கிய முதலிய நூற்கள் இயற்றி இருக்கும் விவேக முதிர்ச்சியினாலும் சோதிட நூற்களையும், வைத்திய நூற்களையும், ஞான நூற்களையும் பரம்பரையாகத் தங்கள் இருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்கு கொண்டுவந்த மகத்துவத்தினாலும் கணிதத்திலும் வைதியத்திலும் வித்துவத்திலும் மாறாமல் விருத்தி பெற்றுவரும் அனுபவங்களிலும் இக்குலத்தார் பூர்வ காலத்தில் சிறப்புற்று இருந்தவர்கள் என்பதையும், தற்காலத்திலும் இக்குலத்திலேயே வித்துவான்கள், புலவர் முதலிய சிரோஷ்டர்கள் அதிகரித்திருபதினாலுமே எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

20. பறையர் என்று வழங்கும்படி ஆனவர்கள் பூர்வ சக்கிரவர்த்திகளின் வம்ச வரிசையைச் சார்ந்தவர்கள் என்பதற்கு அனுபவ ஆதாரம் என்ன?
சாக்கையர்கள் அன்னிய மதத்தவர்களால் நசுங்குண்டு நிலைகுலைந்து இருந்த போதிலும் தங்கள் விவாக காலங்களில் தலைப்பாகை, நெற்றிச்சுட்டி, அங்கி, நடுக்காட்டு, கேடயம், மார்பதக்கம், வெள்ளைக்குதிரை, வெள்ளைக்குடை, செடி முதலிய பதினெட்டு விருதுக்களுடன் கோலம் வந்து மூகூர்த்தம் நடத்திவரும் அனுபவங்களும் போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.

21. இன்னமும் இக்குலத்தார் பூர்வ சக்ரவர்த்திகளின் வம்சத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டோ?
உண்டு, பறையர்கள் மரணகாலங்களில் சவத்திற்கு முன் உயிர் விட்டவன் ஆயுதங்களாம் வாள், கொடி, குடை, கத்தி, முதலியவைகளை ஓர் கொம்பில் கட்டி, மகமேரு என்று தூக்கி வருவதாலும் இக்குலத்தோர் சக்கரவர்த்திகள் என்பதற்கும், மகமேரு மந்திரபிரானாகிய சாக்கைய புத்த பகவான் குலத்தார் என்பதற்கும் சந்தேகமே இல்லை.

22. இவர்கள் வாழும் கிராமங்களுக்கு பெரும்பாலும் சேரி என்று வழங்கி வரும் காரணம் என்ன?
சேர்ந்து வாழும் இடங்களுக்கு சேரி என்று பொருள்படும். இக்கருத்துப் பற்றியே பூர்வ புத்தமத அரசர்கள் வாழ்ந்த இடங்கட்கு சேரி என்று வழங்கி வந்தார்கள். அக்குலத்தைச் சார்ந்த இவர்கள் நாளிது வரையிலும் தாங்கள் வாழும் இடங்களுக்கு சேரி என்றே வழங்குகிறார்கள். இவற்றை ஜீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மேருமந்திர புராணம், சூளாமணி முதலிய காவியங்களில் காணாலாம்.

23. சக்கையகுல சக்கிரவர்த்தியின் வம்ச வரிசையில் பிறந்து உலகு எங்கும் சுற்றி ஞானநீதிகளைப் போதித்து வந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
தற்காலம் உலகத்தில் உள்ள பல திக்குகளிலும் பூமிக்குள் புதைந்து இருக்கும் புத்தரைப்போன்று விக்கிரகங்களும் உலகம் முழுவதும் உள்ள மனுக்களின் மொத்தத்தொகையில் அரையே அரைக்கால் பாகம் புத்த மதத்தவர்கள் இருக்கும் பெரும் தொகையும் அதற்க்கு போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.

24. அவ்வகை பெருந்தொகை உள்ள புத்த மதத்தவர்கள் எங்கு இருக்கின்றாகள்?
தீபெத், சீனம், பர்மா, ஜப்பான், சையாம், சிலோன், நேபால் முதலிய தேசத்தோர்கள் புத்த மதத்தவர்களாக இருப்பது அல்லாமல் ஆங்கிலேயர், அமெரிக்கர், ஜெர்மனியர், முதலியோர்களில் கல்வியில் சிறப்புற்ற அநேகர் புத்த மதத்தை தழுவி இருக்கின்கிறார்கள்.

25. புத்தர் உலகெங்கும் சுற்றி போதித்து வந்த ஞானநீதிகளால் உண்டான பலன் என்ன?
புத்த மதத்தவர்கள் வாழும் தேசங்களின் சிறப்பும் அவர்களுடைய ஒற்றுமையும் சமாதானமும் ஆறுதலும் இதற்கு பலனாகும்.