ஞாயிறு, மே 06, 2018

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள் I

நாகப்பட்டிணம் வணிகத்தில் சிறந்த இடமாக இருந்தது. கல்வியில் சிறந்த இடமாக காஞ்சீவரம் அமைந்து இருந்தது. தென்னிந்திய வரலாற்றில் காஞ்சீவரம் அளவிற்கு எந்த ஒரு நகரமும் சிறந்த பௌத்த மையமாக திகழவில்லை. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பாலி இலக்கியங்களில் காஞ்சீவரம் பௌத்தப் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது (ப 189 பௌத்தக் கலை வரலாறு- Dr.G. சேதுராமன்) கந்தவம்சம் காஞ்சிவரத்தில் இருபது ஆசிரியர்கள் பாலி புத்தகங்களை எழுதினர் என்றுரைக்கிறது.

இந்தியா முழுவதும் ஏன் அயல் நாட்டிற்கும் சென்று பௌத்தத்தை கொண்டு சென்றவர்களில் பெரும் பங்கு வகித்தவர்கள் காஞ்சி பௌத்த அறிஞர்கள். மேலும் பல அறிஞர்கள் காஞ்சிவரம் வந்து பெருமை சேர்த்தனர்.

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள்
(01)  வண.ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்) (02)  வண.போதி தருமர்  (03) வண. சுமதி (04) வண.ஜோதிபாலர் (05) வண.தருமபால ஆசிரியர்  (06) வண.ஆனந்த தேரர்  (07) வண.புத்தாதித்தியர்

காஞ்சிவரத்திற்கு  வந்து பெருமை சேர்த்த  பௌத்த அறிஞர்கள்
(01) அறவண அடிகள் (02) மணிமேகலை (03) சீத்தலைச் சாத்தனார் (04) ஆசாரிய புத்ததத்த மகாதேரர் (05) ஆசாரிய தருமபாலர் (அ) தம்மபால (06)  யுவான் சுவாங் (07) தீபங்கர தேரர் (08) அநுருத்தர் (09)  புத்தகோசர் 

01. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்) (Dinnaga)
வாழ்ந்திருந்த காலம்: (425 AD) ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை 

சீன அறிஞர் யுவான் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தின்னாகரை பற்றி எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம்=சிம்மம்சிங்கம்) செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்னும் ஊரில் பிறந்தவர் என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. 
தின்னாகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். வைதிக வேத நூல்களை நன்கு கற்றவர். தேரவாத பௌத்தத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி (Vatsiputriya) பிரிவின் பிக்கு நாகதத்தரின் (Nagadatta) நட்பு ஏற்பட்டு பிக்குவானார். பின்னர் சில காலம் கழித்து தின்னாகருக்கும் நாகதத்தருக்கும் ஆன்மா பற்றிய கருத்தில் வேறுபாடு ஏற்பட்டு காஞ்சியை விட்டு வெளியேறினார். 

வடநாட்டிற்குச் சென்று பௌத்த தத்துவ மேதையான வசுபந்துவிடம் மாணவரானார். வசுபந்து அவர்களிடமிருந்து மகாயான பௌத்த தத்துவ இயலை நன்கு கற்று பௌத்த அறிஞர் ஆனார். 

பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். நளந்தாவில் ஒரு பிராமண அறிஞரிடம் துர்ஜயவிடம் மாதவிவாதத்தில் வென்றார், இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அரச பொருளாளர் படரபலித (Bhadrapalita) அவர்களை சமய மாற்றம் செய்தார். படரபலித (Bhorosila) அவர்கள் தின்னாகருக்காக ஒரு விகாரை ஒரிசாவில் உள்ள புரோசீலவில் மலையில் கட்டினார் தின்னாகர் தம் வாழ்வில் பெரும்பாலான காலம் ஒரிசாவில் உள்ள விகாரிலும் மகாராட்டித்தில் உள்ள அக்ரா (Accra) விகாரிலும் தங்கிருந்தார் ஒரிசாவிலே இயற்கை எய்தினார் என்று சிலர் கூறுகின்றனர். 

தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் பௌத்த தர்க்கவியலின் (Epistemology) தந்தை என்று அறியப்படுகிறார் (Founder of the Buddhist Logic). நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் பலவற்றை சீன மொழியிலும் திபெத்திய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. பிராமண சமுச்சய் தின்னாகரின் முக்கிய நூல். இதன் விளக்க உரை தான் தர்மகீர்த்தியின் பிராமண வார்த்தி
வடமொழியில் எழுதிய  தர்க்க நூல்கள் :
01. நியாயப் பிரவேசம்  
02. நியாயத்துவாரம் 
தின்னகரின் நூல்கள்

பிராமன்ஸ்சுக்காய (Pramansauccaya)
அலம்பன பரிக்ச (Alambana pariksha)
ஹெட்டுச்சக்கரடமரு (Hetuchakradmru) 
நியாய முக (Nyaya Mukha)
ஆஸ்தவள பிரகாரண (Hastavalaprakarana)
ஆரிய ப்ரஜன பார்மித விவரண (Arya Prajna Parmitavivarana)
அபி தர்ம கோஷா (Abidharmakosha)


02.  வண.போதி தருமர் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் போதி தருமர். போதி தருமரின் இளைய அண்ணன் போதி தருமர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். போதி தருமரின் இயற் பெயர் போதி தாரா.  அவரின் ஆசிரியர் பெயர் ப்ராஜன தாரா (Prajana Dhara). தன் தந்தை மறைந்த பிறகு இல்லறம் துறந்து துறவு மேற்கொண்டார். அப்பொழுது தன் பெயரில் உள்ள தாரா என்ற பெயரை நீக்கி தர்மா என்ற சொல்லை இணைத்துக்கொண்டார். பின்னர் இந்தியா முழுவதும் சென்று தியானத்தை போதித்தார்.

இந்தியாவில் பல ஆண்டுகள் இருந்த போதி தருமர் சீனா தேசம் செல்ல முடிவெடுத்தார். காஞ்சிவரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பெரிய படகில் வந்து சேர்ந்தார். உறவினர்களும் நண்பர்களும் மாமல்லபுரம் வரை வந்து வழியனுப்பினர். பின்னர் மாமல்லபுரம் துறைமுகத்தில் இருந்து சுமத்திரா தீவு (ஜவா) சென்று குங் சவ் (Guang Zhou ) சீன சென்றார். சீனர் போதி தருமரை டா மொ (Ta Mo ) என்று அழைத்தனர்.  டா மொ என்றால் தம்மா (தருமா) என்று பொருள். இளைய அண்ணன் இரு வருடம் கழித்து போதிதருமரை காண சென்றார்.  பின்னர் அவருடன் சில காலம் தங்கிiயிருந்தார். போதி தருமரின் அண்ணனை டாக்சி டா மொ (Daxi Damo ) என்று அழைத்தனர்.
Ven.Bodhi Dharma in Kanchi
சீனா மொழியை பயின்றார். சீனர்களின் கலாச்சாரத்தை அறிந்துணர்ந்தார். அவர் தங்கிருந்த இடத்தை சுற்றி அமைந்திருந்த புத்த விகார்களுக்கு சென்றார். ஆற்றை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். கடல் நீர் உட்புகாமலிருக்க பணியாற்றினார். குடிநீருக்காக கிணற்றரை வெட்டினார். இக்கிணற்றை சீனர் டா மொ கிணறு என்று அழைத்தனர். தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்திலும் வல்லவரான போதி தருமர் அதனை சீனர்களுக்கு கற்பித்தர். 

சீனா தேசத்தை ஆண்டுவந்த ஊ டி (Wu Ti) அவையில் போதி தருமர் தியானத்தை கற்பித்தார். ஊ டி பௌத்தத்தில் பேரார்வம் கொண்டவர். பின்னர் ஊ டிக்கும் போதி தருமருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டது. எனவே அங்கிருந்து வட சீனா சென்று தியானத்தை கற்பித்தார். ஜப்பானுக்கு சென்று அங்கேயும் தியானத்தை கற்பித்தார். ஜப்பானியர் ஸென் (Zen) என்றும், சீனர் சான் (Ch'an) என்றும் போதி தருமரின் தியான மார்க்கத்தை அழைக்கின்றனர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர். சீனாவிலும் ஜப்பானிலும் போதி தருமருக்கு கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். 

போதி தருமர் இயற்க்கை எய்திய பின்னர் கரடி காது என்ற மலையில் இறுதி அஞ்சலி செய்து ஸ்துப ஒன்றை நிறுவினார் (Bear Ear Mountain )

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக