வெள்ளி, மே 11, 2018

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள் II

03. தருமபால ஆசிரியர்
வாழ்ந்திருந்த காலம் கி.பி. 528-560. இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது மகன். இவருக்குத் காஞ்சி மன்னன் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தார். அரசு விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றது, ஆனால் ஒருவருக்கும் சொல்லாமல் ஒரு பௌத்த சங்கத்தை அடைந்து துறவு மேற்கொண்டு பௌத்த பிக்குவனார்.

ஆசாரிய தருமபாலர், தின்னாக (திக்நாக)ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார். வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாதம் செய்து வெற்றிபெற்றார். எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார்.

100 தேரவாத (ஈனயான) பௌத்தர்களுடன் ஏழுநாள் வரை வாதம் செய்து வெற்றிப்பெற்றுத் மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினார். எனவே வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி யாருக்கும் எளிதில் அமைவதில்லை. நன்கு கற்றறிந்த அறிஞர்களுக்குத்தான் அப்பதவி கிடைக்கும்.

தருமபால ஆசிரியரின்  மாணவர்கள்:
01. சீலபத்திரர்-  Visesa Mitra தருமபால ஆசிரியரின் தலைசிறந்த மாணவர் சீலபத்திரர். தருமபால ஆசிரியருக்கு பிறகு நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த மாணவர். 
தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமை ஆசிரியராய் இருந்த பொழுது, தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாதம் செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீலபத்திரரை அப்பிராமணருடன் வாதம் செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்.
02.விசேஷமித்திரர்:
மைத்திரேயர் எழுதிய 'யோகசாரபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர்.
03. ஜின புத்திரர் - Jina Mitra
மைத்திரேயர் எழுதிய  "போதிசத்வபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 
04.ஞானசுந்தரர்:   Jana-Sundara
இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர். 

04. ஆனந்த தேரர்
பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா (அ) மியான்மர் நாட்டை சேர்ந்த சத்தம்ம ஜோதிபாலர் (அ) சாபதர் என்பவர் ஆனந்த தேரரை இலங்கையிலிருந்து பர்மாவுக்கு அழைத்துச் சென்றார். பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மூன்று மகா தேரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு யானையை பரிசாக வழங்கினார். சிவலி (Sivali) தாமலிந்த (Tamalinda) மற்றும் ஆனந்தா ஆகிய மூன்று மகா தேரர்களில் ஆனந்தா தமிழ் நாட்டை சேர்ந்த பிக்கு. (Vinaya) வினாயியின் விதிகளை பின்பற்றி சிவலி மற்றும் தாமலிந்த தாமக்கு தனமாக அளித்த யானைகளை காட்டில் விடுவித்தனர். ஆனால் ஆனந்ததேரர் அந்த யானையை காஞ்சிபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார். இவர் நமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி. 

சிவலி மற்றும் தாமலிந்த ஆனந்தரின் செயல் ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என்று கருதினர்.  இச்செயல் ஆனந்தரை சிவலி மற்றும் தாமலிந்தவிடமிருந்து  பிரித்தது. சில ஆண்டுகள் கழித்து சிவலி தாமலிந்தவிடமிருந்து பிரிந்து தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டார். சிவாலி, தாமலிந்த மற்றும் ஆனந்தா மூன்று வெவ்வேறு பிரிவுகளை நிறுவினர்.

ஆனந்த தேரர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து பின்னர் கி.பி 1245 இல் காலமானார்.

The religious condition of Myanmar

கருத்துகள் இல்லை :